ஆடி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், ஆடி மாத பெளர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.31 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக நேற்று காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, அருணாசலேஸ்வரர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.