பழனி முருகன் கோவிலில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளாபூஜை, 6.10 மணிக்கு சிறுகாலசந்தி, 6.20 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. அதையடுத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிவானம், மூலமந்திரம் யாகம் நடைபெற்று, அஷ்டபந்தனம் இடிக்கப்பட்டு மருந்து தயார் செய்யப்பட்டது. அந்த மருந்து மூலவர் சன்னதியில் உள்ள சிலைக்கும், பீடத்துக்குமான இடைப்பகுதியில் வைத்து சாத்தப்பட்டது. இந்த அஷ்டபந்தன மருந்துக்கான பொருட்கள் தருமை ஆதீனத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.
அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கான ஏற்பாடுகளை சிவசண்முக குருக்கள், பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சர்வசாதகம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.