திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று மகா தேரோட்டம் ஆனது நடைபெற்றது. .
இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் தேர் என்னும் மகாரதம் தேரோட்டத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-வது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி இன்று காலை தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் ஊர்வலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனர். மதியம் 2 மணி அளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ஊர்வலம் வந்தது.
மகா ரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. தேர் திருவிழாவை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய இடங்களில் சி.சி.டிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.