திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய 3 சிறப்பு வரிசைகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெயபேரி, விஜயபேரி, துவாரபாலகர்கள் அருகே பக்தர்கள் வரும்போது, சுவாமியை ஒரு நிமிடம் கூட தரிசனம் செய்ய விடாமல், அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் இழுத்து தள்ளிவிடுகிறார்கள் என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கணக்குக் காட்ட இவ்வாறு செய்யப் படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் கோயிலின் உட்புறம் வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு வரை உள்ள பகுதிகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க புதிய திட்டம் சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தங்கக்கதவு முதல் துவாரபாலகர்கள் வரை 3 வரிசை முறை திட்டத்தை அமல்படுத்தினார். 12 இன்ச், 6 இன்ச் மற்றும் தரைதளம் என 3 விதமான உயரத்தில் வரிசை அமைக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் மறைக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர். இத்திட்டம் பக்தர்கள் இடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது, வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு செல்லும் வரை 3 வரிசைகள் அமைத்து சோதனைமுறை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.