Siruvapuri Murugan Temple Kandha Sasti Vizha

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். 7ஆம் தேதி சூரசம்ஹாரம், 8ஆம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சகட்டமாக வரும் 7ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *