drupathy amman koil mahabaratha peru vizha

காஞ்சிபுரம்  பிள்ளையார்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோவிலில் மகாபாரத பெரு விழாவையொட்டி  இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோவிலில்  ஆண்டுதோறும் மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி  நாள்தோறும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள்,நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில் மகாபாரத பெரு விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.அதையொட்டி  பிரம்மாண்டமாக துரியோதனன்  சிலை வடிவமைக்கப்படடு கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் – துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரௌபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்த சபதம் முடிந்ததையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

மேலும் இந்த துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், அதே பிள்ளையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ திரெளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *