தம்பதியர்களைக் காக்கும்…மெலட்டூர் விநாயகர்!

தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந்துள்ளது மெலட்டூர் விநாயகர் கோவில் குரு பரிகாரத் தலமான தென்குடி திட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்திக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற பெயர் வந்ததன் காரணம் சுவையானது. 1899ம் ஆண்டு உத்தரவாஹினியாக பாயும் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர்தான் இந்தக் கோயிலில் அருள்புரியும் கணபதி. அதனால், இவருக்கு ‘மிதந்தீஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு! 

தெற்குதிசை பார்த்தபடி கரை ஒதுங்கிய கணபதி விக்கிரகத்தை கண்டெடுத்த அன்பர் ஒருவர், அவருக்குக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தார். விநாயகரின் இந்தத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுகின்றனர். இவர் கழுத்தைச் சுற்றி ருத்ராட்ச மாலை ஒன்று அணி செய்கிறது. தெற்கு நோக்கி அமைந்துள்ள கோபுர வாயிலைப் பார்த்தபடி தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார் இந்த ஸித்திபுத்தி சமேத விநாயகர். தெற்கு பார்த்து அருள்வதால் இவருக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விநாயகரின் தனிக் கோயிலாகவே இருந்தாலும் சிவாலயம் போலவே நிர்மாணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாலயத்தில் நடராஜப் பெருமான் இடம் பெற்றிருப்பார்; இந்தக் கோயிலில் நர்த்தன கணபதி அருள் புரிகின்றார்! அஸ்திர தேவரைப் போலவே சூலாயுதம் தாங்கிய சூலத்துறை கணபதியும் தரிசனம் அருள்கிறார். இவர்களுடன் ஸித்திபுத்தி சமேதராக, செப்புத் திருமேனியில் சிரித்தவண்ணம் காட்சியளிக்கிறார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.

மூலவர் சக்தி சமேதராய் இருந்தபோதிலும், ஸித்தி புத்தி தேவியர்கள் சிலா ரூபமாக அல்லாமல் மூலவரின் பீடத்திலேயே மந்திர ஸ்வரூபத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. சிவசொரூபமாகவே விநாயகர் வீற்றிருப்பதால், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத வண்ணம், விநாயகப் பெருமானின் சந்நதிக்கு, இடப்புறத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் ஸ்ரீகும்ப சண்டிகேஸ்வரர். திருமணம் தடைபட்டு வருத்தமுற்றிருக்கும் பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேபோல் தம்பதியரிடையே கருத்து வேற்றுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளையும் போக்கி மகிழ்ச்சியைத்தருகிறார் இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர்.