aavani month sirappu

ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால், ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும்.

ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள்

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்" என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்யமாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஓரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவார்கள். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமாகும்.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் – என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும்.

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். 

ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு

ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

இத்தகைய சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலன்களையும் பெறுவோம்.

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *