Dhanvanthri peedam pavithra urchava homam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பவித்ர உற்சவ வைபவம் வருகிற  26.05.2022 முதல் 28.05.2022 வரை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற 26.05.2022 வியாழக்கிழமை முதல் 28.05.2022 சனிக்கிழமை வரை ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பவித்ர உற்சவம் மஹோத்சவமாக நடைபெறவுள்ளது.  

பவித்ர உற்சவத்தின் சிறப்பு:

ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்பட வேண்டிய நித்திய நைமித்திய காம்ய. கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள், மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ஷேத்திரத்தின் புனித  தன்மையை மேம்படுத்தவும், பெருமாளுக்கு ஸாந்நித்யத்தைக் கூட்டவும் பவித்ரோத்ஸவம் எனும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஹோமத்தின் மூலம் நவக்ரஹ, பூத ப்ரேத பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள்  விலகி ஆயுள், ஆரோக்கியம், புகழ். செல்வம், செல்வாக்கு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைக்க நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் ஹோமம் செய்யப்படவுள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பாக்கியம் கிடைக்கும். மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கப்படும் என்பது திண்ணம். அந்த விசேஷமான பவித்ரோத்சவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டையில் ஆட்சி புரிகின்ற ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும்,   ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சத்யநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்,  ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர், 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர், கருட ஆழ்வார் மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் சுப கிருது வருடம், வைகாசி மாதம் 12ந் தேதி (26.05.2022) வியாழக்கிழமை காலை துவங்கி வைகாசி மாதம் 14ந் தேதி (28.05.2022) சனிக்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை உபய வேத கிரந்த பாராயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்று மறை, தீர்த்த பிரசாத விநியோககங்களுடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேத பாராயணம், விஷேச திருமஞ்சனம், சகல தேவதா ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் – தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு    யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்    ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளின் அருள் பெறவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்:

வைகாசி 12ம் தேதி 26.05.2022 வியாழக்கிழமை 
காலை 9.00 மணிக்கு புண்யாஹவாசனம், திரவிய பூஜை, திருமஞ்சனம், வாஸ்து ஹோமம்,                  வேத சாற்று முறை. 
மாலை 5.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்சங்க்ரஹணம், அக்னி  பிரதிஷ்டை, அங்குரார்பணம், பவித்ர பூஜை, கலச ஆவாஹனம், சயநாதிவாசம், ஹெளத்ரம், ரக்ஷாபந்தனம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, பிரசாத விநியோகம்

வைகாசி 13ம் தேதி 27.5.2022 வெள்ளிக்கிழமை 
காலை 9.00 மணிக்கு சுப்ரபாதம், புண்யாஹவாசனம்  பவித்ர ஜபம், அக்னி பிரதிஷ்டை, கால சாந்தி, பவித்ரம் சாற்றுதல், பிரதான ஹோமம், மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, ஆராதனம்,                          பிரசாத விநியோகம்.
மாலை 5.30 மணிக்கு புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், பிரதான மூல மந்திர ஹோமம், சாந்தி ஹோமம், மஹா  சாந்தி பூர்ணாஹுதி, ஆராதனம், பிரசாத விநியோகம். வைகாசி 14ம் தேதி 28.05.2022 சனிக்கிழமை காலை புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், ப்ரதான ஹோமம், அந்த ஹோமம், யாத்ரா தானம், சக்ர ஸ்தானம், கலச புறப்பாடு, ஆவாஹனம், பவித்ர விசர்ஜனம், சதுர் வேத  பூஜை, ப்ரம்ம கோஷம், அக்ஷதை ஆசீர்வாதம், தீர்த்த பிரசாத விநியோகம்.

பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *