kiruthigai viradham

முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.இன்றய தினம் முருகனை விரதம் இருந்து வணங்க வேண்டும். முருகப் பெருமானை கிருத்திகை, விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப் பெருமானை இன்றய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

உங்களுடைய வீட்டையும் பூஜை அறையை முழுமையாக துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தலை ஸ்னானம் செய்து விட்டு, பூஜையறையில்  முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு புதியதாக பூக்களை சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும்.

பின்பு பூஜை அறையில் முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜை அறையில் அமர்ந்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

உங்களது விரதத்தை காலையில் தொடங்கி அன்றைய நாள் முழுவதும் நீங்கள் ‘ஓம் முருகா ஓம்’ அல்லது ‘ஓம் சரவண பவஓம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு பூஜை அறையில் ஆறு மண் அகல் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

நட்சத்திர கோலம் போட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்களை எழுதி அந்த நட்சத்திர கோலத்தை சுற்றி நீங்கள் ஏற்றிய மண்அகல் தீபத்தை வைத்து, முருகப்பெருமானை வழிபடுவது மிக மிக நல்லது.

முருகனுக்குப் பிடித்த சிவப்பு நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் சிவப்பு நிற கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும்.

முருகப் பெருமானுக்கு சுத்தமான பசும் பாலில் நாட்டுச் சர்க்கரை போட்டு நிவேதனமாக வைக்கலாம், அல்லது சர்க்கரைப் பொங்கலை நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்க சமைத்து நிவேதனமாக வைக்கலாம்.

உங்கள் பூஜையறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை முருகப் பெருமானிடம் மனமுருகி சொல்லி, கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் உச்சரித்து முருகப் பெருமான் வழிபாடு மேற் கொள்வது உங்களுக்கு பல மடங்கு பலனைத் தரும் .

இறுதியாக எம்பெருமானுக்கு தீப தூப, கற்பூர ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார்.மனதார முருகப் பெருமானை வேண்டி இந்த பூஜையை செய்பவர்கள் வேண்டிய வேண்டுதல் கூடிய விரைவில் நிச்சயம் நிறைவேறும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *