Naga dhosham neenga bogar

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ''போகர்12000'' நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார்.

அவர் குறிப்பிடும் அந்த தினம் ''நாக சதுர்த்தி திதி'' அதென்ன திதி? பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ''தேய்பிறை திதி'' என்றும், பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை ''வளர்பிறை திதி'' என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ''கிருஷ்ணபட்சம்'', ''சுக்கிலபட்சம்'' என்பர். இவை முறையே…

1. பிரதமை.
2. துவி தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பவுர்ணமி என்று வரிசைப்படுத்தப்படுகிறது.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப்படுகின்றன. இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் நான்காவது நாளான வளர்பிறை சதுர்த்தி திதி பற்றியே.. அதிலும் வரும் வளர்பிறை சதுர்த்தி நாள்தான் ''நாக சதுர்த்தி'' என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாக சதுர்த்தி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது. சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர்.

தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்…

"நாக சதுர்த்தி திதி'' அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்க மாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *