Vetri tharum ambigai vazhipadu

வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.

உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
ஆனை முகனின் அன்னையே!
வேதம் போற்றும் வித்தகியே!
ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
கருணை மழையே!
அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.

*மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
மலையத்துவஜன் மகளே!
அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

*புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.

*கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
வெற்றி தேவதையே!
உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *