mandhirathai thavaraga sonnal

வீட்டில் தினசரி செய்கிற பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தப்பி தவறி தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா? என்பதற்கான விடையை இப்பதிவில்  பார்க்கலாம்.

ஒரு செல்வந்தர் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர். 

செல்வந்தருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம். 

வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த செல்வந்தரின் காதில் அந்த ஊர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி ஒருவர் வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒருவேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ? என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி நடந்தார். ஞானமும், அழகும் ஒருங்கே வடிவெடுத்தது போன்ற சங்கரரை கண்ணார கண்டார். 

நெஞ்சார தொழுதார். தனது கஷ்டங்களை கண்ணீராக அவரிடம் முறையிட்டார். இருட்டு இருக்கும் திசை நோக்கி வெளிச்சம் வருவது போல் செல்வந்தரை பார்த்த சங்கரர் அவரை பக்கத்தில் அழைத்து அன்னை பவானியின் மூல மந்திரத்தை கொடுத்து இதை நம்பிக்கையோடு உபாசனை செய் கஷ்டம் தீருமென்று அனுப்பி வைத்தார். 

பசியால் அழுதவனுக்கு பால்பாயசம் கிடைத்தது போன்ற சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்த செல்வந்தர் விஷத்தை தூக்கி எறிந்து விட்டு பூஜையில் போய் உட்கார்ந்து மந்திர ஜெபம் செய்ய ஆரம்பித்தார். 

சங்கரர் கொடுத்த முழு மந்திரத்தை அவரால் உச்சரிக்க இயலவில்லை. அந்த மந்திரத்தில் உள்ள பவானி என்ற வார்த்தையை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது. செல்வந்தர் கவலைப்படவில்லை முடிந்ததை சொல்வோம் என்ற எண்ணத்தில் "பவானி","பவானி"என்று தியானம் செய்ய துவங்கினார்.

பசியால் அழுத குழந்தைக்கு விண்ணில் இருந்து இறங்கி வந்து பால் கொடுக்கின்ற கருணை வள்ளலான அன்னை பவானியால் அருள் செய்யாமல் இருக்க முடியுமா? செல்வந்தரின் துயரத்தை அவள் நீக்கினாள். 

மந்திரம் சரியாக சொல்கிறோமா? தவறாக சொல்கிறோமா என்பது முக்கியமல்ல எத்தகைய ஈடுபாட்டோடு சொல்கிறோம் என்பது தான் முக்கியம்.  காரணம் கடவுள் வார்த்தையை பார்ப்பதில்லை. இதயத்தை பார்க்கிறான். தவறுதலாக மந்திரத்தை சொல்லிவிடுவோமோ என்ற அச்சத்தில் பூஜை செய்ய வேண்டாம் என்பதற்காக இப்பதிவு. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *