Puratasi veedu kudipoga kudathu en

தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகலாமா? போகக்கூடாதா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

இரணியன் கதை :

இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார். இரணியன் ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான். தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தை தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகுவிரைவில் இரணியனை கொன்று, அவர்களை காப்பாற்றுவதாக அருளினார்.

தேவேந்திரன் இரணியனைப் பழிவாங்க நினைத்து, இரணியனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளை சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். அனைவரும் இரணியனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரணியனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரணியன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார்.

'தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரணியன், 'அந்த ஹரி எங்கே இருக்கிறான்?" என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், 'எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என்று ஒரு தூணைக் காட்டினான். இரணியன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமந் நாராயணனாகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.

அவரைத் தாக்கப் பாய்ந்தான் இரணியன். நரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்து, குடல்களை உருவி, மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லாரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *