Gajalakshmi Vazhipadu

இவளே ராஜலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்று பெயர். கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி எனவும் அழைப்பர். கஜலட்சுமியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.

நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நிலமகளாகிய இலக்குமியின்மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். ‘தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழைபொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினையுடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ – என வேண்டி கஜலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *