Egadasi Viradham Irukkum Murai

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். இந்த விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்.

ஏகாதசிக்கு விரதம் இருக்கும் முறை

வைகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம்  இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி அன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *