Thruvenkadu ther

சீர்காழி அருகே திருவெண்காட்டில் புதன் ஸ்தலத்தில் ஸ்ரீ சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரன்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும்,ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர்.

நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம்.சுவேதாரன்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா நடை பெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான  திருத்தேரோட்டம் திருவிழா இன்று  நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. 

தொடர்ந்து வினாயகர், முருகன், சுவாமி, அம்பாள் அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து திருத்தேர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரகணக்கான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *