திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் 3வது நாளில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்மாவதி, சீனிவாச பெருமாளின் திருமணத்தை நினைவு கூறும் விதமாக திருமணம் நடைபெற்ற முந்தைய நாள்
முதல் மூன்று நாட்கள் பத்மாவதி பரிநய உற்சவம் என்ற பெயரில் 1992ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிநய உற்சவம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று முந்தினம் பரிநய உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முதல்நாள் கஜ வாகனத்திலும், இரண்டாவது நாள் தங்க குதிரை வாகனத்திலும் மூன்றாவது நாளான இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் தனி பல்லக்கிலும் எழுந்தருளி நான்குமாட வீதியில் ஊர்வலமாக சென்று, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு மலையப்பசுவாமியும், தாயார்களும் எதிர்ரெதிர் திசைகளில் கொலு வைக்கப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, பூ பந்து எறிதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் மலையப்ப சுவாமியும், தாயார்களும் எழுந்தருளினர். அன்னமய்யா சங்கீர்த்தனைகள் பாடப்பட்டது.
இதையடுத்து, மலையப்ப சுவாமியும், தாயார்களும் பரிநய மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதில் செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் , இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகளும் திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.