Veetil Kolam poduvadhu

நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும். 

கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின்பு எப்படிக் கோலாகலமாக அழகுடன் இருக்கிறதோ அதுபோல தான் கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதீகம். 

தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவைகள். இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது சிறப்பு. 

அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினாலும் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். 

சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. 

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் உண்டாகும். வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை பூஜை அறையில் அல்லது வீட்டிற்குள் போடலாம். 

படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. 

கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். அவ்வாறு போட்டால் ஏறு முகமான பலனை தரும். கோலத்தில் இடப்படும் காவி நிறம் சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இதுபோன்று கோலத்தை வீட்டில் போட்டு வந்தால், சகல நன்மையும் கிடைக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *