deepavali-oil-thayarippu-murai

தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.

கங்கா ஸ்நானம் :
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும்.

இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

ஏன் அதிகாலை ?
எப்போதும் சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் தீபாவளியன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்னரே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஏன் தெரியுமா?

பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார்.

எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார்.

எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.

இதோடு நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *