vatradha-neer-ootru

மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் கோயில் நாசிக் மாவட்டத்தில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாகத் திகழ்கிறது. இத்தலம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த தபோவனங்கள் நிறைந்த இடமாக உள்ளது.

இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று அதிசயம் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக்கோவில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்பு அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.

இந்தப் பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளி விழுந்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்குத் தங்கியதாகவும், அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

 திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு, சிம்ம ராசியில் வரும் போது கும்பமேளா பெருவிழா இங்கே கொண்டாடப்படுகின்றது.

இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாத பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்பதில் சந்தேகமில்லை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *