thiruchendur-aani-varushabishegam

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆனி வருசாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரையோரத் தலமுமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியத் திருவிழாக்களில் ஆனி வருஷாபிஷேகம் மற்றும் தை உத்திர வருஷாபிஷேக விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இன்று ஆனி வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூப ஆராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் மகா மண்டபத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கும்பக் கலசங்களுக்கும், குமரவிடங்கப் பெருமான் சந்நிதியில் சுவாமி சண்முகர் கும்பத்துக்கும் பெருமாள் சந்நிதி முன்பு வெங்கடாஜலபதி கும்பக் கலசத்துக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

காலை 8 மணிக்குக் கும்பக் கலசங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 8.30 மணி முதல் 9 மணிக்குள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்குப் போத்திமார்கள் மூலமும் சுவாமி சண்முகர் விமானத்துக்குச் சிவாச்சாரியார்கள் மூலமும் வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்குப் பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள்மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

வருஷாபிஷேகம் நடைபெற்றதால், இந்த நாளில் இரவில் மூலவருக்கு அபிஷேகம் (ராக்கால அபிஷேகம்) நடைபெறாது. தொடர்ந்து, மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமாள், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருஷாபிசேக விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மற்றும் கோபுர தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *