2017-12-02-13-52-58

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர். இதையடுத்து, 200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபமானது 11 நாட்கள் வரை எரியும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *