2017-09-18-15-07-59

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 20-ந் தேதி மாலையில் பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து அம்மனுக்கு 21-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 22-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 24-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. 25-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 26-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 28-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், மாலையில் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 29-ந் தேதி விஜயதசமியான அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், காலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் அருணாசலேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *