நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் உள்ள முதல் கிரகம் புதன் ஆகும். கிரகங்களில் இளையவராக இருப்பதால், சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுழலக் கூடிய ஆற்றல்மிக்க கிரகமாக புதன் இருக்கிறான். சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் என்பதால், புதனுக்கு சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும். இதன் காரணமாக புதன், புத்தி, அறிவு, ஞானம் உள்ளவராக இருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர். இத்தகைய ஆற்றல் மிக்க புதன் யார்? அவனது வரலாறு என்ன, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
குருபகவானின் மனைவியான தாரை, ஒரு சமயம் சந்திரனுடைய இல்லத்திற்கு செல்கிறாள். அப்பொழுது, சந்திரனின் அழகை கண்டு மயங்கிய தாரை தன் கணவன் குரு பகவானை மறந்து சிலகாலம் சந்திரன் இருப்பிடத்தில் வசிக்கிறாள். அப்போது சிவபெருமானை நோக்கி குரு பகவான் தவத்தில் இருந்ததால், மனைவி தாரையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரன், தாரையை தன் மனைவியாகவே நினைத்து சிலகாலம் அவளோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டான். பின் தவம் முடிந்து குரு பகவான் தாரையைத் தேடினார். இதனால் தாரை, சந்திரனிடமிருந்து விடை பெற்று மீண்டும் குருவிடம் வந்து சரண் அடைந்தாள். அவ்வேளையில் தாரை கர்ப்பவதியாக இருந்தாள். குருவோடு சிலகாலம் வாழ்ந்ததும், தாரா ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு புதன் என்று பெயரிட்டாள். திருமண வாழ்க்கைக்கும் தாம்பத்திய நிலைக்கும் மாறாக பிறந்த அந்த குழந்தை சீக்கிரமே பிறந்து விட்டது. இந்த குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்று குரு பகவானுக்கே சந்தேகம் உண்டானது. அவரது சந்தேகம் நியாயமானது என்பதை அறிந்த பிரம்ம தேவன் புதனுடைய உண்மையான தந்தை சந்திரன் தான் என்பதை குருவுக்கு எடுத்துரைத்தார் என்பது புராண கதைகளில் ஒன்று.
பிரம்ம தேவன் புதனை அழைத்து "சூரியனுக்கு அருகில் அமர்க" என கட்டளையிட்டதால், புதனும் அதனை ஏற்று சூரியனுக்கு அருகே வந்து அமர்ந்தான். சூரியனைப் போலவே சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒன்பது கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரத்தினை பெற்றான். புதன் தன் கைப்பட பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஒன்று தற்போதும் காசியில் உள்ளது. புதன் மீண்டும் கடும் தவம் மேற்கொண்டு, ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிபதியாக தேர்வு செய்யப்பட்டான் என்கிறது வேதம். உலக உயிர்களுக்கு அறிவை அளிப்பதால், புத்தி போதகன் என்றும், அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் என்ற பெயர்களும் புதனுக்கு உள்ளது. புதனுக்கு வலது புறம் ஸ்ரீ மகா விஷ்ணு இருப்பதால், அவரை பிரார்த்தனை செய்தாலும் அது புதனை சென்று அடையும்.
- பொன்.கோ.முத்து திருவள்ளூர்