Seek Lord Lord Shri Varakar’s Blessings for Your Dream Home!

திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள பெரமண்டூர் கிராமத்தில் வீற்றிருக்கிறது ஸ்ரீவராகர் ஆலயம். 

மார்கழி மாதம், ஆண்டாளை வழிபட வேண்டிய மாதம். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்துக்கும் சம்பந்தம் உண்டு. தசாவதாரங்களில் மூவுலகங்களையும் அளந்த திரிவிக்ரம அவதாரம்கூட, இந்த பூமியில் கால் ஊன்றி நின்றது. ஆனால், வராக அவதாரமோ பூமியையே தன் கொம்பில் ஒரு தூசியைப் போல எளிதாகத் தூக்கி நின்று அருளியது. அதனால் அவதாரங்களில் வராக அவதாரமே பெரியது என்கிறார்கள் ஆசார்யர்கள்.

“வராக சுவாமி என்றாலே பூமியைக் காப்பவர் என்பதுதான் முதலில் தோன்றும். வாங்கிய நிலத்தில் பிரச்னை, நீண்ட நாள்களாக முயற்சி செய்தும் சொந்த வீடு வாங்க முடியாத நிலை, நிலத்தைப் பிரிப்பதில் வில்லங்கள், வீடு கட்டி முடிக்க முடியாமல் தடுமாறுதல் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் இங்குவந்து வேண்டிக் கொண்டால் அந்தக் குறைகளைத் தீர்ப்பார்.

நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்க, நிலப்பத்திரங்களைக் கொண்டுவந்து சுவாமியின் பாதத்தில் வைத்து நெய்விளக்கேற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வராக சுவாமி, இங்கு பூமாதேவியை ஆலிங்கனம் செய்த நிலையில் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதால், இது திருமணப் பரிகாரத் தலமாகவும் விளங்கிறது. அர்த்த மண்டப விதானத்தில் சுவாமியை தரிசித்துப் பணிவதுபோல் ராகு-கேது அம்சமாக சர்ப்பம் ஒன்று காணப்படுகிறது. எனவே இத்தலம் ராகு – கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தேவர்களும் அனைவரும் வந்து பூஜை செய்த பெருமாள் இவர். அனுக்கிரக மூர்த்தி. சுவாமியின் ஒரு கண் பூமாதேவியையும் மறு கண் தரிசிக்க வரும் பக்தர்களைக் காணும் விதமாகவும் சுவாமியின் திருக்கோலம் அமைந்துள்ளது விசேஷம். ஆகவே, சுவாமியின் பார்வை பட்டால் தீராத நோயெல்லாம் விரைவில் தீரும். வீட்டில் செல்வ வளம் சேரும்.

ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழைமையான கோயில். இங்கு வந்து வேண்டி பலன் பெற்றோர் அநேகர். குழந்தை வரம் பெற்றதால் நன்றிக் காணிக்கை யாக துலாபாரம் குடுத்த பக்தர்கள் பலர். இன்னும், இந்தத் தலத்தின் மகிமை அறிந்து அநேகர் வந்து தரிசனம் செய்து வரங்கள் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்கிறார்கள் இக்கோயிலின் அர்ச்சகர்கள். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *