Are Rahu and Ketu bad omens? Simple remedies…

காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன. ஒருவரின் தாய்வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக ராகு வருகிறார். கேது – தந்தை வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக வருகிறார். ராகு- கேது குறித்து முழுமையாக அறிந்துகொண்டால், தோஷத்துக்கு மட்டுமல்ல; பல தருணங்களில் பூரண சந்தோஷத்துக்கும் இவர்களே காரணமாகத் திகழ்வது புரியும்.

ராகு தோஷ பாதிப்புகள் மட்டுப்பட, வீட்டிலேயே சனிக்கிழமைகளில் மாலையில் அம்பிகைக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வரலாம். அதேபோல், பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து வழிபட்டு வருவதாலும் ராகு தோஷப் பாதிப்புகள் விலகும்.

கேதுபகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில், கேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு அருகம்புல் மோதகம் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்வார். ஏழை மாணவர்களின் படிப்புக்கும் சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கும் உதவி செய்வதால் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

காஞ்சி சித்ரகுப்தரைத் தரிசித்து வருவதும் கேது பகவானுக்கு ப்ரீத்தியானது. கீழப் பெரும்பள்ளம், திருப்பாம்புரம் தலங்களுக்கும் சென்று வழிபடலாம்.
 
ஓர் ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்கு உரிய கிரகம் மறைந்து பலவீனமாகி இருக்க, அந்தக் கிரகத்துடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகங்களும், பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால், அவருக்குத் திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியால் மருத்துவச் செலவுகளும், மற்ற செலவுகளும் வந்துகொண்டே இருக்கும்.

அதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதனுடன் 6-க்கு உரிய கிரகமும் சேர்ந்து, இவர்களுடன் 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகமும் சேர்ந்து, இந்தக் கூட்டுக் கிரகங்களை சனி பார்த்து விட்டால், அவருக்கு மருந்தே வாழ்க்கையாகி விடும். அதாவது, அவர் வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகளுடனேயே வாழ்வார். பூர்வ புண்யாதி பதியுடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்தால் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.

பொதுவாக, மேஷம் தொடங்கி மீனம் வரையிலான 12 ராசியினருக்குமே நோய்கள் வந்து மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசியினர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; உடல்ரீதியான பிரச்னைகளைச் சந்திப்பார்கள். ராசிநாதனே இந்த நான்கு ராசிகளுக்கும் 6, 8-ஆம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால், மற்ற ராசியினரைவிட இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

இவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால், நோயற்ற நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

மருத்துவச் செலவு தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யலாம். பழைமையான ஆலயங்களின் தலவிருட்சப் பராமரிப்பில் ஈடுபடலாம். மா, அத்தி உள்ளிட்ட பால் மரக் கன்றுகளை பொது இடங்களில் நட்டுப் பராமரிக்கலாம்.

தெரிந்தோ தெரியாமலோ யாருடைய சொத்தையோ பணத்தையோ அபகரித்து இருந்தால், அவற்றை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவது நன்று.

இந்தப் பரிகாரங்களோடு, கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கோயில்கொண்டுள்ள சரபேஸ்வரரை வழிபட்டு, அவரவர் வயதைக் குறிக்கும் எண்ணிக்கை யில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், நோய், கடன், வழக்கு பிரச்னைகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

– கே.என். கோபால சாஸ்திரி
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *