சென்னை, வேலூர் செல்லும் வழியில் 80 கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலும் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பாலுசெட்டி சத்திரத்தின் அருகில் உள்ளது திருப்புட்குழி. ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது.

ஜடாயு பறவைக்கு ஈமக்கிரியை செய்யப்பட்ட தலம் என்பதால், இத்தல முலவரான விஜயராகவப் பெருமாள் ஜடாயுவை தன் மடியில் வைத்தபடி காட்சி தருகிறார். நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். , பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58 வது திவ்ய தேசம். தாயார் பெயர் மரகதவல்லி என்பதாகும். இவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள தாயார் வருத்த பயிரை முளைக்க வைக்கும் மரகதவல்லி தாயார் என அழைக்கப்படுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டும்.பெண்கள் இங்குள்ள ஜடாயு திர்த்தத்தில் நீராடி,மடப்பள்ளியில் தரும் வறுத்து, நனைத்த பயறை தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் அதிசயம் என்னவென்றால்,உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக்கொண்ட கல்குதிரை.

இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால் ,முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.