மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முதல்நாளான நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையில் கூட்டம் அலைமோதியது. தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளுடன், தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
உண்டியல், நெய் அபிஷேகம் உள்ளிட்ட இனங்களில் முதல் நாளான நேற்று 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானம் என தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல பூஜை முதல் நாள் வருமானத்தை விட 1.28 கோடி அதிகம்.. கடந்த ஆண்டை விட அதிக பக்தர்களின் வருகையால் வருமானம் அதிகரித்துள்ளது.