Viyapputum Viralgalin Attral

மானுட சமூகத்தின் உடல், மனம் சார்ந்த நலனுக்கும், அவை சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தமிழர்கள் தீர்வு கண்டதைப்போல உலகில் வேறு எவரும் தீர்வு கண்டிருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

வாழும் முறையான வாழ்வியலிலேயே நோய் நீக்குதல், வாழ்வியல் கொண்டே நலமுடனும், வலிமையுடனும் வாழ்ந்து என்ன சாதிக்க விரும்புகிறோமோ அதனைச் சாதிக்க அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து இந்த உலகிற்குச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் அதிலும் குறிப்பாக சித்தர் பெருமக்கள்.

யோகம், யோகாசனம் என வடமொழியில் குறிப்பிடப்பட்டாலும் ஓகம் என்பதே சரியான தமிழ்ச் சொல். இதனைக் கண்டறிந்தவர்கள் நமது முன்னோர்கள், பேரறிவு படைத்த சித்தர் பெருமக்கள். ஆனால் அவர்களோ, இது நாங்கள் கண்டறிந்தது அல்ல எங்களுக்கெல்லாம் தலைமையானவர் சிவபெருமானும் அவரது சீடர்களுமே என்கின்றனர். 

சித்தபெருமக்கள் பல்வேறு மருத்துவ முறைகளைக் கூறியிருந்தாலும், வேகமான இந்த மின்னணு உலகிலும் எளிமையாகச் செய்து நலன் பெறுவதற்கும் மருத்துவ, ஓக முறைகளை நமக்கு அளித்துள்ளன.

அப்படிப்பட்ட ஒரு ஓக முறைதான் முத்திரை ஓகம்.

கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஓகமே, முத்திரை ஓகம்.

இதற்கு அறிவியல் அடிப்படை என்னவென்று உடனே நமக்குள் கேள்வி எழுவது இயல்பு.

இதற்கு முதலில் உடலியல் பற்றிய அடிப்படை அறிதல் மிக முக்கியமானது.  உடலியல் இதையே மெய்யியல் என்றும் அழைக்கிறோம். மெய் இயல் என்பது உண்மையான இயல் என்று ஒரு பொருள் இருந்தாலும் மெய் என்றால் உடல் என்ற ஒரு பொருளும் உள்ளது. எனவே மெய்யியல் என்பது உடலியல் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த உலகமும், நமது மனித உடல் உள்பட எல்லா உயிர்களும் ஐம் பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து விதமான இயற்கைப் பொருளால் உருவானது என்பது அடிப்படை.

நாம் எளிதாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம் என்ற ஐந்து பொருட்கள் அல்லது ஐந்து பூதங்கள் என்று அழைக்கிறோம்.

நாம் வாழும் இந்த பூமி என்பது நிலம். அந்தப் பூமியின் மத்தியிலும், சூரியனிலும் இருப்பது நெருப்பு. கடல் உள்பட நீர் நிலைகளில் இருப்பது நீர், எப்போதும் சிலு சிலுவென, சில நேரங்களில் கடுமையாக வீசுவது காற்று. இதில் ஆக்சிஜன் எனப்படும் காற்று இல்லையெனில் நாம் உட்பட எந்த உயிரும் வாழ இயலாது. இதற்கு அடுத்ததாக ஆகாயம். அதாவது பூமியைச் சுற்றியுள்ள எல்லா வெற்றிடங்களுமே ஆகாயம் அல்லது புரியும்படியாக வானம் என்று வைத்துக்கொள்ளலாம். இந்தியாவில் இருப்பவர் ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தால் தெரிவதும் ஆகாயம்தான், அமெரிக்காவில் இருந்து ஒருவர் மேல் நோக்கிப் பார்த்தாலும் ஆகாயம்தான்.

”அண்டத்தில் உள்ளதே
பிண்டத்திலும் உள்ளது”

என்கிறார் சித்தர் பெருமான் ஒளவைப் பிராட்டி.

அண்டம் என்பது ஆங்கிலத்தில் Universe என்று பொருள். பிண்டம் என்றால் உடல் என்று பொருள். இந்த அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்ற ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை நான்கு சொற்களில் சொல்லும் திறன்தான் சித்தர் பெருமக்களின் பேரறிவுத் திறன். 

அந்தவகையில் அண்டத்தில் பார்த்த அதே நிலம், நெருப்பு, நீர், காற்று, ஆகாயம்தான் மனிதனின் பிண்டத்திலும் அதாவது உடலிலும் உள்ளது என்கிறார் ஔவையார்.

சதைப் பிடிப்போடு இருக்கும் இந்த உடல் நிலம். ரத்தம் உள்பட உடலில் உள்ள நீர்மப் பொருள் நீர். உடலை வெப்பமாக வைத்திருந்து ரத்தம் உறையாது இருக்கவும் உடல் தட்ப வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்கவும் வெப்பம் அவசியம். அதை உருவாக்குவது நெருப்பு. நாம் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதே காற்று. காற்று இல்லையெனில் ஒரு விநாடிகூட நாம் உயிர் வாழ இயலாது. இவற்றுக்கெல்லாம் தலையாயதாக இருப்பது ஆகாயம். 

அண்டத்திற்கும், பிண்டத்திற்குமான இப்படி ஒரு ஒப்பீட்டின் அடிப்படையிலேயே நாம் முத்திரை ஓகத்தைப் புரிந்து கொள்வது எளிது.

சொன்னால வியப்பாக இருக்கும். பிண்டம் எனும் உடலில் உள்ள இந்த ஐந்து பூதங்களின் பிரதிநிதியாக, சுவிட்சுகளாக இருப்பவைதான் நமது இரண்டு கைகளில் உள்ள விரல்கள். 

இந்த விரல்களை வைத்துதான் முத்திரை ஓகம் செய்யப்போகிறோம்.  உடல் நலன், மன நலன் பெறப்போகிறோம். உடல் ஆற்றலை, உயிர் ஆற்றலை மிகச்சரியாக பயன்படுத்தப்போகிறோம்.

எப்படி….. அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

– விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *