2018-04-07-13-53-56

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியாக திருவருள் புரிகிறாள் அம்பிகை. 51 சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். தல தீர்த்தமாக பாபநாச தீர்த்தம் துலங்குகிறது. இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் பக்தர்கள் செலுத்தும் முக்கிய நேர்த்தி கடன்கள். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி நாகரத்தினத்தால் ஆனது என்பார்கள். தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *