திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது. இவரை தரிசித்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இன்று, காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.