திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்பு அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு எண்ணிக்கை கணக்கு இருக்காது. அளவும் பெரிதாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது தேவஸ்தானம். இலவச தரிசனத்தில், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தற்போது லட்டுகளை தேவஸ்தானம் சலுகை விலையில் வழங்கி வருகிறது. ஆனால் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவாகிறது. இதனால் கூடுதல் செலவாக ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு சுமை ஏற்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு வழங்குவதை தொடர வேண்டுமானால் விலையை சற்று உயர்த்தினால் தான் முடியும் என்று கூறியுள்ளது. எனவே லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.