2016-09-14-05-39-05

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப்பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில், உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அம்மன் சிவப்பு நிறப்பட்டு அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தேன், இளநீர், பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பகவதிஅம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதனை காண கேரள பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உஷபூஜை, உஷ தீபாராதனை போன்றவைகளும் மதியம் உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, அன்னதானம் போன்றவைகளும் நடந்தது.
14 ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும் 15 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தை யட்டி பச்சை நிறப்பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *