Tag: Siddhar

  • Kalappu Thirumanam Seidha Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர் பிரான்களில் சிறந்தவர் சிவவாக்கியர்.

    சித்தர்களில் அதிக அளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் 
    சிவவாக்கியரே.
    அனல்பறக்கும் சொற்கள், புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல்கள், சிவவாக்கியரின் சிறப்பைச் சொல்லும்.

    அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர்.
    தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள்..

    பெற்றோர் செய்த அறத்தின் பயனாய் 
    அருள் தவத்தின் பலனாய் அவதரித்தார் சிவவாக்கியர்.

     ஆன்மீகப் பற்றும் தேடல்நிலையும் 
    நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்கியர் குறித்த தகவல் அவரது ஐம்பது வயது வரை ஏதுமில்லை .
    வடக்கே காசியின் மகிமையை கேள்விப்பட்ட சிவவாக்கியர் 
    ஐம்பதாவது வயதின் நிறைவில் 
    அங்கு சென்றது அவரது வாழ்வில் அரும்பிய திருப்புமுனை.

    காசியில் ஒரு சித்தர். 
    அவர் காசினி காணா பெரும் சித்தர்.
    செருப்பு தைப்பது அவரது தொழில். 
    சக்கிலி சித்தர் என்பர் அவரை 

    அவர் சக்தி மிக்கவர். வாசியில் வல்லவர். சித்தியில் சிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.
     காசியின் 
    குறும் சந்துகளில் 
    இருபுறமும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஞானத்தேடலோடு சென்றுகொண்டிருந்த சிவவாக்கியர் கண்களில் அந்த சித்தர் பட்டார்.

    சிவவாக்கியர் கண்கள் நகர மறுத்தன. அவரை விட்டு மீள மறுத்தன.
    அப்படி ஒரு ஈர்க்கும் முகம். கவர்ந்திழுக்கும் பொலிவு.
    வைத்த கண் வாங்காது சிவவாக்கியர் 
    அச்சித்தரை நெருங்கினார்.

    அதுவரை இல்லாத ஈர்ப்பு. பூர்வ ஜென்ம உறவு போல ஒரு தொடர்பு.
    விட்டகுறையோ தொட்டகுறையோ நிறைநோக்கி நெருங்கி வந்தார் 
    எதிர்கால சித்தர்.

    "வாப்பா…
    எதைத்தேடி வந்தாய் ?
    வா….தேடியது கிடைக்கும்.

     இங்கே அமர்வாய்."
    ஒரு பலகையைக் காட்டினார் சித்தர். 
    பதில் ஏதும் சொல்லாமல் உத்தரவுக்கு உட்பட்ட பணியாளர் போல் 
    அவர் முகத்தை தரிசித்தபடி அமர்ந்தார் சிவவாக்கியர்.

    "எனது தேடல்…." ஆரம்பித்தார் சிவவாக்கியர்.
    "தெரியுமே….!" அதிர்ச்சியூட்டினார் சித்தர்.
    கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

     ஆயினும் மௌனமும் பார்வையும் 
    மெலிதாய் பேசின. 
    நிறைய பேசின. நிறைவாய் பேசின.

    குருவாய் செருப்புத் தைப்பவர். 
    சீடராய் வேதம் ஓதிய அந்தணர். 
    இருவரும் ஒன்றாகிப் போயினர்.

     "உனக்குத் தீர்வு சொல்கிறேன்….
     இந்தா … இது நான்
     செருப்பு தைத்த காசு.

    இதோ….
    இது சுரைக்காய்…
    பேய்ச் சுரைக்காய்.

     இரண்டையும் தருகிறேன்.
    காசை
    காசியில் 
    ஓசையோடு ஓடும் கங்கையில் போடு.

    கங்கை வேறுயாருமல்ல… என் தங்கையே !
     பேய் சுரக்காய் கசக்கும் அல்லவா ? 
    கங்கை நீரில் கழுவி 
    கசப்பு நீக்கி வா……"
    குரு எடுத்துத் தந்தார்.

    குரு பேச்சுக்கு மறுபேச்சு கூடாது. 
    இதுவே குரு – சீடர் உறவுக்குப் பாலபாடம்.

    அருகில் ஓடிய கங்கைக்குச் சென்றார் சிவவாக்கியர்.
    காசை எடுத்து தூக்கி எறியும் போது….
    ஆற்றிலிருந்து 
    வலதுகை ஒன்று வளையோசை  ஒலிர மெதுவாய் எழுந்தது.

    சிவவாக்கியரை சைகையால் 
    வா…. வா வென அழைத்தது அத்திருக்கரம்.

    காசினை அக்கையில் வைத்து வணங்கி நின்றார்.
    பெண்ணரசியின் வலதுகை வளையோசை கலகலவென ஒலி எழுப்பிய வண்ணம் மீண்டும் நீருக்குள் மறைந்தது.

    பின்னர்
    பேய்ச் சுரைக்காயை கங்கை கரையினில் நின்று கருத்தாய் கழுவினார்.
    குருவிடம் ஓடி வந்தார்.
    தாழ் பணிந்தார்.

     "நல்லது……
    ஆனால் நான் ஒரு தவறுசெய்துவிட்டேன்.,." சித்தர் சிரித்தபடி தொடர்ந்தார்.
    "ஆம்….கங்கைநீர் இங்கேயே இருக்கிறது காசை அதில் போட்டிருக்கலாம்.

     உன் வாழ்வின் 
    முற்பிறப்பு மாசுகளையும் கழுவி இருக்கலாம்.,,
    இதோ பார்….
    செருப்புத் தோலினால் ஆன  பை….."
    அதைத் திறந்தார்.

    அதில் கங்கை நீர் இருந்தது .
    மீண்டும் அவளிடம்  காசைத் திரும்பக்கேள் ….,தருவாள்……. ஆசீர்வதிப்பாள் ….."

    சிவவாக்கியர் எதுவும் யோசிக்கவில்லை.
    ஒரு சொல்.
    சிறு சொல்.
    குரு சொல்….என்பது 
    குரு சீடர் உறவின் 
    அடுத்த பாடம்.

    குருவின் திருவுருவில் திருவாய் மலர்ந்த சொற்களில் மயங்கியிருந்த 
    சீடர் சிவவாக்கியர் மனமுருகி 
    வேண்டி நின்றார்
    குரு கட்டளைப்படி.

    அந்த தோல் பையிலிருந்து புனித கங்கை வந்தாள்….
    அதே வளையோசை….
    காசு தந்தாள்.
    சீடர் பெற்றார்.

    ஆசீர்வதித்த படி கங்கையின் கை 
    நீரில் மூழ்கியது .

    "சரியப்பா…
    உன் மனமும் குணமும் கொஞ்சம் குழம்பி இருக்கிறதே…!

    உன் தேடல் கூட 
    அதை நாடித் தானே..!"
    புதிர் போட்டார் சித்தர்.

    புரியாது விழித்தார் சிவவாக்கியர்.

    "பெண்ணின்
    கையைக் கண்டதும் பரவசம் அடைகிறாய்.!

    காசு தரும்போதும் பெறும்போதும் 
    கரம் படும்போதும் 
    கிளர்ச்சி அடைகிறாய்.

    ம் …..காமம்…
    சித்திக்குமுன்
    வாழ்ந்து விடு…..பின்வா….

    சித்திக்கு அதுவே
    சரியான வழி.

    திருமணம் செய்துகொள். வாழ்ந்துபார்…..
    பின் 
    ஒரே மனம் நாடு.

    முக்தி தேடு.
    கண்டிப்பாகக் கிடைக்கும். சித்தி கைகூடும்.

    சித்தரின் சொற்கள் சிவவாக்கியருக்குப் பிரமிப்பைத் தந்தன.
    ' எனது சஞ்சலங்கள் சுவாமிக்கு தெரிந்தது எப்படி ?
    அண்மைக் காலமாய் ஐம்பது வயதில் எழும்
    பேரின்பப் பெண்ணாசை… திருமணமா.. துறவறமா என்று இருந்த மனக்குழப்பம்
     இவருக்கும் தெரிந்திருக்கிறதே….'

    யோசித்த நொடிகளில் குருவின் 
    அடுத்த கட்டளை வந்தது.

    "இந்தா ..மண் 
    இது நீ கங்கையில் சுரையை கரைத்த போது ஒட்டி வந்தது.

    இது … ..நீ
    கசப்பைக் கழுவியதாகக் கருதும் பேய்ச்சுரைக்காய்.

    இரண்டையும் 
    கொண்டு சொல்.

    எந்த பெண்மணி இவற்றைக் கொண்டு சமைத்து தருகிறாளோ 
    அவளே உன் மனையாள்.

    அவளை மணம் செய்.
    உன் மணம் சிறக்கும். மனம்,  பின் திறக்கும் ."

    வாழ்த்தி 
    விடைகொடுத்தார் 
    செருப்பு சித்தரான 
    பெரும் நெருப்பொத்த 
    ஒளி சிந்தும் 
    ஞானசித்தர்.

    குருவின் வார்த்தைகளுக்கு
    குறுக்கே 
    நடக்குமா உண்மையா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடாது.
     சந்தேகமே தப்பு .

    குடும்ப உறவுக்கு மட்டுமல்ல. .
    துறவுக்கும் 
    சந்தேகம் மகா தப்பு.

    குரு கட்டளையை ஒருநாள்கூட 
    தாமதமாக்க கூடாது.

    குரு – சீடர்- இறை
    உறவில் 
    தேர்ச்சி அடைய
    சரணாகதி தான் 
    சரியான வழி.

    இவையெல்லாம் அடுத்தடுத்த பாடங்கள்.

    அதி சீக்கிரமாய்
    அதி தீவிரமாய் விடைபெற்றார் சிவவாக்கியர்.

    ஐம்பது வயதிலும்  பதினாறு வயதினராய் தனக்கேற்ற இணை தேடி காதல் பயணம் மேற்கொண்டார்.
    தெற்கே போகும் நடைபயணம் !
    பாவம்,  சிவவாக்கியர்
    அது ஒரு நீண்ட நெடிய பயணமாக இருந்தது.

    பார்த்த பெண்டிரெல்லாம் சிவவாக்கியரின் உடற்கட்டில் –  உடற்கூறில் உருகி மனம் மயங்கி காதலிக்க வந்தது என்னவோ நிஜம்தான்.

    ஆனால்
    எச்சூட்டிலும் வேகாத மணலையும் 
    கறிக்கு ஆகாத 
    பேய்ச் சுரைக்காயையும் தந்து சமைத்து தர சொல்கிறாரே…. 
    இவர் என்ன பைத்தியமா… என பயந்து விலகி 
    கேலி பேசினர் .

    ஆயிற்று 
    இப்படியே சில காலம். தென் பகுதிக்கே வந்து சேர்ந்தார்.
    அங்கே ஒரு காடு.
    அதில் ஒரு குடியிறுப்பு. ஆதிவாசிகளான
    குறவர் குடியிருப்பு.

    அங்கு சென்றார் பெண்ணொன்று கண்டார் .
    காட்சிக்கு இனியவளாய் மனதுக்கு உகந்தவளாய் அம்மங்கை தென்பட்டாள்.
    "நிறைய பசி…. இவற்றை வைத்து சமைத்துத் தர முடியுமா ?"
     ஆவலோடு கேட்டார்.

    பதிலே கூற வில்லை.
    உடனே வாங்கினாள். உள்ளே சென்றாள்.
    சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் –
    முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை வலிக்காமல் வழித்தபடி.

    கரங்களில் சுவையான சமையல். 
    ஐந்து நட்சத்திர அறுசுவை உணவு தயார்.
    அம்மணி அப்படி அற்புதமாய் சமைத்தது இறையருள்.
    செருப்பு சித்தரின் விருப்பம்.

    ஏன் என்று யோசிக்காமல் எப்படி என்றும் பார்க்காமல் துறவி போலிருக்கும் ஒருவர் கேட்டார் என்பதற்காக 
    சமையலில் இறங்கிய சரணாகதி சிவவாக்கியருக்குப் பிடித்துப் போனது.

    குரு சுட்டிக் காட்டிய மணமகள் 
    அமுது படைத்த
    குறவன் மகளான
     தங்க மயிலே
     என புரிந்தார். 

    அவளே தனக்குரிய மனையாள் என்று  
    மனம் மகிழ்ந்தார்.

    காட்டிற்குச் சென்றிருந்த அவள் பெற்றோர் 
    வரும் வரை 
    காத்திருந்தார்.

    பெண் கேட்டார். 
    அவர்கட்கும் சம்மதமே .

    இருப்பினும் வேண்டுகோள் ஒன்றை கண்டிப்போடு நிபந்தனையாக வைத்தார்கள்.

    மாப்பிள்ளை 
    தங்களுடனேயே தங்கி
    தம் தொழிலே செய்து குலம் செழிக்க வைக்க வேண்டுமென்று.

    சுருங்கச் சொல்லின் 
    'வீட்டு மாப்பிள்ளை.'

    ஐம்பது வயதில் 
    இனி ஆவதென்ன?
    குருவின் கட்டளை. மனைவியின் பெற்றோரின் நிர்பந்தம்.

    சொந்தம் தொடங்கும்போதே 
    பந்தம் வைக்கும்
    நிர்பந்தம்.

    மறுக்கவில்லை சிவவாக்கியர் .
    நடந்தது திருமணம் 
    குறவர் குடி வாழ்த்த.

    அந்தணர் குலத்தில் பிறந்தவருக்கு 
    குறவர் குலத்தில் திருமணம் .

    குரு மனம் சுட்டிய நல்மணம். 
    திருமணம் நாடியவருக்கு இரு மனம் ஒப்பிய
    கலப்புத் திருமணம்.

    குறவர் இனம் போற்ற தமிழ்த் திருமணம்.
    சிவவாக்கியர் அவதரித்த போது உச்சரித்த முதல் சொல்லாய் சிவ…. சிவ என்று பவனி வந்தவர் சிவபிரான்.  
    அவரின் ஞானமைந்தன் முருகப் பெருமான் மணந்தது வள்ளி என்னும் குறவர் குல கொழுந்தைத்தானே..!

    முருகப்பெருமானைப் போன்றே சிவவாக்கியரும் குறவர் குலப் பெண்ணுக்கு மாலை சூடி 
    குறவரானார்.
     

  • Sundaranandha Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    அழகில் சிறந்த 
    அற்புதச் சித்தர்
     சுந்தரானந்தர்.

    சித்தர்களில் அவர் ஓரு சக்கரவர்த்தி.

     சுந்தரானந்தரின் சித்து விளையாட்டு பாண்டிய நாடு எங்கும் மெல்ல மெல்ல பரவி வந்த காலம்.

    அது மன்னன் செவிகளுக்கும் எட்டியது, ஒருநாள்.

    அரசன் அபிஷேக பாண்டியன் ஆன்மீக நாட்டம் உடையவன்.

    அரசன் என்பதால் அகங்காரமும் அதிகாரத் திமிரும் அவனுக்கு இயல்பாய் இருந்தன.

    அரசன் வீரர்களை அழைத்தான்.

    " சுந்தரானந்தரை அழைத்து வாருங்கள்.., அவரைக் காண அரசர் ஆவலாய் இருக்கிறார் எனச் சொல்லி அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டான்.

    வீரர்கள் விரைந்தனர் சுந்தரானந்தர் வசிப்பிடத்திற்கு.

    "ஐயா , எங்கள் அரசர் உங்களைக் காண காத்திருக்கிறார்..அழைத்து வரச்சொன்னார்.. எங்களோடு வாருங்கள்.." பணிவாகத்தான் சொன்னார்கள் பணியாட்கள்.

    தவசீலர் மெலிதாகச் சிரித்தார்.

    "என்னப்பா வேடிக்கையாய் இருக்கிறதே !

    ஆற்றைக் காண அரசன் விரும்பினால் அவரல்லவா ஆற்றுப்பக்கம் வரவேண்டும்.

     ஆற்றை வெட்டி அரண்மனைக்கு அழைத்துச் செல்வீர்களா? 

     அழைப்பது அரசனாய் இருக்கலாம் ..,. ஆனால் அழைக்கப்படுவது முற்றும் துறந்தவனை .. முக்காலமும் உணர்ந்தவனை…

     அரசனைப் பார்த்து எனக்கு ஆவதென்ன ?

     ஒன்றுமில்லையே !

    ' நான் அரசன்' என்னும் மமதையால் மகிழ்ந்து இருப்பவனைக் காண்பதில் என்ன பயன் ?!

    அரசனைச்  சொல்லிக் குற்றமில்லை.
    அவன் உத்தரவிடுபவனாகவே இருக்கிறான்.

    பலரும் இப்படித்தான்.

    'நான்' இருப்பவர்களிடம் ஞான 'நாண்' இருக்காது. அது சேரும் இடம் போய் சேராது.

     சுந்தரானந்தர் கூறியது வீரர்களுக்கு புரியவில்லை.

     ஆனால் அதை அப்படியே அரசனிடம் ஒப்பித்தார்கள்.

     அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன் முதலில் அதிர்ந்தான். வியந்தான். யோசித்தான். உண்மை இருப்பதாய் உணர்ந்தான்.

     துறவி  உரைத்த ஒவ்வொரு சொல்லிலும் லயித்தான்.

     அதன்பின் அவரது வார்த்தைகள் நாள் முழுதும் அசரீரியாய் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

     பின்னொரு நாள்..

    மதுரை ஆலவாய் அழகன் கோயிலில் மன்னனும் சுந்தரானந்தரும்  எதிரெதிராக வந்தபோது சந்திக்க நேர்ந்தது.

    உள்ளத்தில் அவர் பற்றிய ஓவியம் உயர்வாய் இருந்தாலும் அரசன் என்ற மிடுக்கு அப்போதும் மன்னனுக்கு இருந்தது.

     " நீர் தான் மாயங்களை நிகழ்த்தும் மாயாவியா? " திமிர் கொஞ்சம் வார்த்தைகளில் தெறித்தது.

    " மன்னா தப்பாக நினைத்து உள்ளீர்கள்…. மாயம் என்பது வேறு.
     சித்து என்பது வேறு…

     மாயங்கள் அற்பமானவை சித்தர் சாகசங்கள் இறையருள் கொண்டவை.

    ஐம்புலன் சுருக்கி உள்ளொளி பெருக்கி பஞ்சபூதங்களை வசமாக்கி பிரபஞ்சம் அறிந்துணர்ந்து செயல்படுவது சித்தாடல்.

     அரசே….
    சித்து எல்லோருக்கும் கைவரும். அதற்கு பயிற்சி, முயற்சி தேவை.

     உமக்கும் வரும் …இதோ இந்த வீரர்களுக்கும் வரும்."

    துறவியின் கணீர் சொற்கள் கோயில் சுவரில் முட்டி மோதி எதிரொலித்தன.

    "அப்படியா….. நல்லது… எங்கே உங்கள் 
    தவசக்தியால் – சித்த சாகசத்தால் இந்த கல் யானையை உயிருள்ள யானையாக உலவச் செய்யுங்கள் பார்க்கலாம்.."

      அபிஷேக பாண்டியன் அருகிலிருந்த ஒரு கல்லாலான யானையை சுட்டிக்காட்டி ஆர்வமுடனும் சற்று ஆணவத்துடனும் கேட்டான்.

     அரசனை ஒருமுறை பார்த்து சிரித்தபடி கல் யானையின் மீது கண் பதித்தார் சுந்தரானந்தர்.

     அடுத்த நொடி கல் யானை உயிர்பெற்றது. மண்டபம் அதிர பிளிறியது.
    காதுகளை ஆட்டியபடி காலடி எடுத்து வைத்தது .

    பிரமித்துப் போயினர் மன்னரும், அவரது பரிவாரமும் .

    பரி வாரத்தில் ஓர் ஏவலாளி.
    அவன் கையில் கரும்பு இருந்தது .

    கரும்பைக் கண்ணுற்ற கருத்த யானை  தும்பிக்கையை நீட்டி அக்கரும்பை பறித்தது சாறு ஒழுக கரும்பை ருசித்து மகிழ்ந்தது.

    ' பார்ப்பது கனவா' என திகைத்த அபிஷேக பாண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    அரசனின் கழுத்தை அலங்கரித்து இருந்த முத்துமாலையை லாவகமாக எட்டிப் பறித்தது விளையாட்டாக.

    பதறிப் போனான் பாண்டியன்.

    சித்தரின் மகத்துவம் சிந்தையை நிறைத்தது .

    கல்யானை 
    சித்த சாகசத்தை உரைகல்லாக உணர்த்திய பின்னர் வேறுஎன்ன இருக்கு !

    அப்படியே சுந்தரானந்தர் திருவடி விழுந்தான். கண்ணீரால் அவர்தம் பாதம் துடைத்தான்.

    "சுவாமி ….உள்ளம் தெளிந்தேன் சித்தர் மகத்துவம் அறிந்தேன்..

    எனக்கு ஓர் அருள் வரம் நீங்கள் தரவேண்டும்.

     எனக்கு பிள்ளைப்பேறு இல்லை. அரச குலத்தில் பிள்ளை இல்லாதது பெரும் தொல்லை .பிள்ளை வரம் தாருங்கள்."

    காலில் விழுந்தவன் ஏழாமல் கேட்டான்.

    கைப்பிடித்து 
    எழச்சொன்ன இறைமுனி உறுதி தந்தார்.

    "மன்னா.… பிள்ளை பிறப்பான்.. உன் குலம் விளங்கும்… கவலைப்படாதே"
     கண்ணீர் துடைத்தார் .

    நடந்தவற்றையெல்லாம் ரசித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
    நிஜ யானை  மன்னர் கழுத்தில் முத்து மாலையைப் போட்டு வாழ்த்தியது .

    பின்னர் சித்தரை தாழ்பணிந்து வணங்கியது. மீண்டும்
    ' கல்' யானையானது.

     மன்னனும் பரிவாரமும் கைகூப்பித் தொழ  அவர்கள் கண் முன்னேயே ஆலவாயன் சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

    இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கல்யானை பார்க்கலாம்.

    அருகிருக்கும் சன்னதியில் சித்தர் சுந்தரானந்தரை தரிசிக்கலாம் பேரருள் பெறலாம்.