Tag: devotees

  • 2025 English New Year: Special arrangements at Thiruverkadu Temple

    ருகிற 2025 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. 

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக, முந்தைய தினமான டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    அதன்படி, வருகிற புத்தாண்டையொட்ட்டி  நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது, கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31 ஆம் தேதி 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. 
     

  • Vaikunta Ekadasi: Special Arrangements at Ezhumalaiyan Temple

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற ஜனவரி 10  ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

    இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமளா ராவ் மேற்கொண்டார். 

    திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் ஜனவரி 9 ஆம் தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும். 3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.

    இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Tirupathy devotees

    கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் அனைத்துப் பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
       
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநில அரசின் உத்தரவுக்காக தேவஸ்தான அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

     திருமலை-திருப்பதி தேஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று ஏழுமலையான் கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநில அரசு உத்தரவின்படி தான் ஏழுமலையான் கோவில் திறக்கப்படும். அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். பக்தர்களை தங்க வைக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 5 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தரையில் கட்டங்கள் போடப்பட்டுள்ளன. தினமும் 7 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் முதல் கட்டமாக தேவஸ்தான ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களும், 2-வது கட்டமாக உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.