Blog

  • kan-thirushti-nikkum-kan-niraintha-perumal

     

    நீண்டப் பெரியவாய கண்கள் என்னை பேதமை செய்தனவே!’ இது திருப்பாணாழ்வாரின் வாக்கியம். உறையூர் அழகியமணவாளனை மட்டுமின்றி, மலையடிப்பட்டி கண் நிறைந்த பெருமாளையும் இது குறிக்கும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள ஊர் மலையடிப்பட்டி. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீகண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேக – ஆராதனைகள் செய்து வழிபட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்; திருஷ்டி தோஷங்கள் விலகும். 

    சுமார் 2500 வருட பழைமை வாய்ந்த கோயில் இது. ஒருகாலத்தில், ‘திருமால் அடிப்பட்டி’ என அழைக்கப்பட்டு, பின்னர் இந்த ஊர் ‘மலையடிப்பட்டி’ என மருவியதாகச் சொல்வர். சீதை பெற்ற செல்வம் லவன். பின்னர் சீதைக்கு உதவியாக வால்மீகி முனிவர் குசனை தோற்றுவித்த தலம் இது. பராசக்தியின் அருள், இந்த சக்தி தீ்ர்த்தத்தில் விளையும் தர்ப்பைக்கு உண்டு என்பர்.

    நின்றான், அமர்ந்தான், கிடந்தான் எனும் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மதுரை கூடலழகர் கோயிலிலும் பெருமாள் இதுபோன்ற மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். சயனித்துள்ள மூலவர் அனந்தபத்மநாபனாகவும், அமர்ந்த நிலையில் உற்சவர் வைகுண்டநாதராகவும் அருள்கிறார். நின்ற கோல பெருமாள் புண்டரீகாட்சன் எனும் திருநாமத்தில் அழைக்கப் படுகிறார். தாயார் கமலவல்லி நாச்சியார், செல்வங்கள் அள்ளித் தந்து பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் தீர்க்கிறாள்.

     

     

    புகழ்பெற்ற திருவனந்தபுர அனந்தபத்மநாபனுக்கும் கண் நிறைந்த பெருமாளுக்கும் சில பொருத்தங்கள் உண்டு. அங்குள்ளது போன்றே, கருவறை…. மூன்று பாகங்களில் வாயில் கதவுகள் இல்லாமல், தூண்கள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. திருவரங்கத்து அரங்கன் புஜங்க சயனம், மலையடிப்பட்டி அரங்கன் அனந்த சயனம். பாதங்களில் பத்ம கமலங்கள் (தாமரை மலர்).  திவாகர மகரிஷி தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்துப் பலன் பெற்றார். எனவே, தாமரை மலர்கள் கொண்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு. பாதத்துக்கு அருகில் ஸ்ரீமகாலட்சுமியும்  நாபிக்கமலத்தில் பிரம்மாவும், நவகிரகங்களும், கந்தர்வர்களும் வீற்றிருக்கின்றனர். இறைவனின் பாதத்தையொட்டி ஸ்ரீபட்டாபிஷேக நரசிம்மரும், ஸ்ரீவைகுண்டநாதரும் வீற்றிருக்கிறார்கள். மற்ற எந்த திருத்தலத்திலும் பட்டாபிஷேக நரசிம்மரைத் தரிசிப்பது அரிது என்கின்றனர். இரண்ய வதம் முடித்து பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் கோலத்தில் காட்சி அளிக்கிறார் இவர். ஸ்ரீவைகுண்ட நாதர் தரிசனம் முக்தி அளிக்கும்.

     

    கோயிலுக்கு எதிரில் சக்திவாய்ந்த தீர்த்தக்குளம் உள்ளது. இங்கே பக்தர்கள் கால்கள்படாமல் நீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, பிறகு கோயிலுக்குள் செல்ல வேண்டும்.  தல விருட்சமான அழிஞ்சில் மற்றும் வில்வத்துக்கு இங்குள்ள சக்தி தீர்த்தத் திலிருந்து கால்படாமல் நீர் எடுத்து வந்து ஊற்றி, நம் கைகளால் அரைத்த மஞ்சள் பூசி, குங்குமத்தில் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமிகடாட்சம் பெருகும்; திருமணத் தடை நீங்கும். பெருமாளின் திருமுடிக்கு மிக அருகில் இறக்கையை விரித்த வண்ணம் கருட பகவான் சேவை சாதிக்கிறார். எனவே, முக்தி தரும் தலம் இது என்கிறது ஸ்தல வரலாறு.

    கண் திருஷ்டி, பில்லி சூனியம், ஏவல் மற்றும் சகல வித தோஷங்களும் பெருமாளை ஸேவித்தால் நீங்கும். பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் வேண்டிக்கொண்டால், பார்வை சீராகும். மேலும் இந்தத் தலத்தை கிரிவலம் வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம புண்ணியங்களைப் பெறலாம். பக்தர்கள் முப்பது முழம் சாமந்தி அல்லது செவ்வந்திப் பூக்களை மாலையாகக் கோத்து அணிவித்தால் நன்மை கிட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.

     

     

  • 2017-10-29-17-10-11

    தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் சோளிங்கர். காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திவ்ய தேசம் ஆகும்.

    பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் 1000 – 2000 ஆண்டுகள் பழமையான கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    இங்கு 500 அடி உயரமுள்ள (1500 படிகள் அமைந்து) கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் (406 படிகள் அமைந்து) சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள்.

    இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.

    ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால். வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர்

    ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை,” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், “”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என்பக்தர்களின் குறைகளை போக்கி வா,”என்று கூறினார்.

    அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் “யோக ஆஞ்சநேயராக’ சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

  • 9

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்த புஷ்பயாகம், காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல், புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத ஸ்ராவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, பல வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 டன் மலர்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 டன் மலர்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 டன் மலர்கள் என மொத்தம் 9 டன் மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.

  • 2017-10-28-15-52-40

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிராமத்தில் நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தக்கலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரளபுரம் கிராமம். இங்கு 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி பல்வேறு பதிவார தெய்வங்கள் உள்ளன. அவ்வாறு பதிவார தெய்வமாக விளங்கும் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை, அதிசய விநாயகராக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகாதேவர் ஆலயத்தில் உள்ள இந்த விநாயகருக்கு விமான மண்டபம் இல்லை. வெயில், மழை இரண்டுமே விநாயகர் சிலை மீது விழும். விநாயகர் நிறம் மாறும் காலகட்டத்தில், அங்குள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சிலை சந்திர காந்தக் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வெள்ளையாகவும் விநாயகர் காட்சியளிக்கிறார். விநாயகர் கறுப்பாக இருக்கும் போது, தண்ணீர் கலங்கலாக சுவை இழந்தும், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது, கிணற்றின் தரை பகுதி வரை தெரிவதுடன் தண்ணீரும் சுவையாக இருக்கும் என கூறுகின்றனர்.

  • 2017-10-28-12-10-03

    திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் செய்யும் ஸ்ரீவாரி சேவையில் புதிய முறையை தேவஸ்தானம் அமல்படுத்துகிறது. நவம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.
    ஏழுமலையானுக்கு தற்போது சேவை செய்ய வரும் பக்தர்கள் ஒரு வாரம் திருமலையில் தங்கி சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, ஏழுமலையான் தரிசனம், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
    இந்நிலையில், 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தொடங்க வேண்டும் என இளைஞர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 3 மற்றும் 4 நாள்கள் சேவையை தேவஸ்தானம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில், சேவை புரிய விரும்பும் இளைஞர்கள் அக்டோபர் 24 முதல் தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    3 நாள்கள் சேவை: வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, வயது வரம்பு 25 முதல் 40 வரை. 4 நாள்கள் சேவை: திங்கள் முதல் வியாழக்கிழமை வரை, வயது வரம்பு- 18 முதல் 60 வரை என தேவஸ்தானம் தெரிவித்தது.

  • 2017-10-28-11-48-38

    தேரழந்தூர் ஸ்ரீஆமருவி பெருமாள் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட ரத வெள்ளோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
    நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில், 108 வைணவ திருத் தலங்களில் 10-ஆவது தலமும், பஞ்ச கிருஷ்ணாரன்ய சேத்திரத்தில் முதன்மையானதுமான ஸ்ரீஆமருவி பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோயிலில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட ரதத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலின் திருமங்கை மன்னன் மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி, பிரதிஷ்டை, கும்ப புரோக்ஷனம் ஆகியவை செய்யப்பட்டு, ரதம் வெள்ளோட்டம் கோயிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

  • 2

    அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் தோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில். கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு நீ…’ என தொடங்கும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் 2 வயது மகள் சிபா, இந்த பாடலை பாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. தோனியே இதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயிலும் உலகளவில் பிரபலமாகி விட்டது. இதையடுத்து, கோயில் திருவிழாவின் போது தோனி மகள் சிபாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 14ம் தேதி கோயிலில் நடக்கும் 12 களபம் திருவிழாவின் போது தோனி மகளை அழைத்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • kuzhanthai-varam-venduma-thirukarukavuruku-selga

     

     

    குழந்தை வரம் வேண்டுமா  திருக்கருகாவூரில் உள்ள கர்ப்பரட்சாம்பிகையின் சந்நிதிக்கு வந்து, அம்பாளை மனதார வழிப்பட்டால் ,நிச்சயம் உங்களுக்கு குழந்தை வரம்  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

     குழந்தை பாக்கியம் மட்டும் அல்ல, திருமண பாக்கியம் கூடி வராத பெண்களும்   இங்கு வந்து  கர்ப்பரட்சாம்பிகை  பிரார்த்தனை  செய்தால் திருமணம் கூடி வரும்.  அதே போல் ,முற்பிறவிகளின் கர்மாக்கள் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பின்,வியாழக்கிழமைகளில்  கர்ப்பரட்சாம்பிகை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வந்தால்,வம்ச தோஷம் நீங்கி,புத்திர பாக்கியம் கிடைக்கும். இது மட்டும் அல்ல அடியார்களை வாட்டும் நோய்நோடிகளில் இருந்து அவர்களைக் காத்தருள செய்கிறார்.

     வளர்பிறை பிரதோஷ   நாளில் கருகாவூரின் நாயகர் முல்லைவனநாதர்க்கு புனுகு சார்த்தி வணங்கினால்,தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும்  என்பதும் இத்தலத்துக்கான மற்றொரு சிறப்பு அம்சமாகும். இத்தலம்   வரலாற்று  காலம் தொட்டே,கருவுற்ற  மகளிருக்கான ஆரோக்கியதலமாக இருந்து வந்துள்ளது. போர் நிகழும் காலங்களில் ,கருவுற்ற மகளிருக்கு அடைக்கலாம் தரும் இடமாக  இவ்வூர் திகழ்ந்தாக வரலாற்றுக்   கூறுகிறது.

     தங்க தொட்டில் தலலோ

     

    தமிழக கோயில்களிலேயே   இங்கே மட்டும் தான் தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் போல தங்கரதம் செய்ய வேண்டும் என்ற யோசனை  எழுந்த போது. எது மகப்பேறு அருளும் தலம் என்பதால் தங்கத் தொட்டில் செய்துவைத்தோம் என்கிறார்கள். அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்,தங்க தொட்டிலில் தங்கள் சிசுவைப் படுக்கவைத்து,அம்பாள்  சந்நிதியை ஒருமுறை வலம் வருகின்றனர்.

    தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டிலுக்குச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால்,அழகாக உருண்டு வரும்.குழந்தைக்காக வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையச் செய்யலாம்.அவர்கள், குழந்தைக்கு பதிலாகக் கோயிலில்  தரப்படும் ஸ்கந்தர் விக்கிரத்தை தொட்டிலில் இட்டு ,அம்பாள் சந்நிதியை வலம்வந்தால், குழந்தை பாக்கியம்   நிச்சயம் கிடைக்கும்.

     

    அன்னையின் அருள் பெற்றதாக  நடிகை ஸ்ரீப்ரியா நம்முடன் சிலவற்றை பகிர்கிறார்.

    என் வாழ்வில் திருக்கருகாவூருக்கு  ஓரு முக்கியமான இடம் உண்டு.என்னுடைய அம்மா ஊர் கும்பகோணம். அதனால் அதை சுத்தி இருக்கிற கோயில்கள் பத்தி எல்லாம் அவங்களுக்கு நல்லா தெரியும்.  என்னுடைய முதல் குழந்தை .ஆறு மாதங்களில்  சிதைஞ்சுப் போயிடுச்சு.அந்த சமயத்தில் நான்  ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன். அம்மா திருக்கருகாவூர் கோயிலுக்கு பொய் எங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணிட்டு பிரசாதமும் ,நெய்யும் கொண்டு வந்து  கொடுத்தாங்க.

    நாங்க கோவிலுக்கு போகலன்னாலும். அந்த கர்ப்பரட்சகி மேல முழு நம்பிக்கையும் வெச்சு, மனதார  வேண்டிக்கிட்டு முறைப்படி அந்த நெய்யைச் சாப்பிட்டு வந்தோம்.அந்த வருடமே  மீண்டும் நான் கருத்தரிச்சேன். அதிலிருந்து யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தப்பட்டு   என்கிட்ட  சொன்னால் உடனே நான் அவங்களுக்குச் சொல்றது திருக்கருகாவூர் போய்ட்டு வாங்க என்பது தான்.   40 வயதுக்கு மேல ஆனவங்களுக்குக் கூட திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை  கோவிலுக்கு  சென்று வந்தால் குழந்தை பிறந்திருக்கு.

    குழந்தை இல்லாதவர்கள்  நம்பிக்கையோடு ஒருமுறை திருக்கருகாவூர் சென்று அம்பாளை வழிப்பட்டு வாருங்கள். நிச்சயம் அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

     

  • penvadiva-thatchanamurithi

     

     

    சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    தல வரலாறு: சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, ‘நானே உயர்ந்தவள்’ என வாதிட்டாள். ”சரி…நீயே உயர்ந்தவளாக இரு!” என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள். 
    அதற்கு சிவன், ”பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், தில்லை(சிதம்பரம்) வந்து என்னை நோக்கி தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன். அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய்,” என்றார். 
    அவள் ‘தில்லை காளி’ என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். ‘எல்லைக்காளி’ என்றும் சொல்வர். 
    நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப் போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்ர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்டார். ஆனால், பெண்மைக்குரிய தன்மையால் அவளால் இயலவில்லை. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, ‘வேதநாயகி’ எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். அவளும் ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்தசொரூபிணியாக அருள்கிறாள்.
    தில்லை காளி: தில்லை காளிக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறு (ராகு காலம்), பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள், நினைத்தது நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். 
    வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் ‘கடம்பவன தக்ஷணரூபிணி’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு ‘வீணை வித்யாம்பிகை’ என்று பெயர். கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம்.

  • thatchanamurthiyum-kuru-bagavanum-oruvara

     

    தட்சிணாமூர்த்தி என்பவர் யார்? குரு என்பவர் யார்? மூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் தட்சிணாமூர்த்தி வேறு. இருவரும் ஒருவரல்ல.ஆனால் நிறையபேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என நினைத்துக்கொண்டு வழிபாடு செய்கின்றார்கள்.(நானும் அவ்வாறு வழிபாடு செய்துவந்துள்ளேன்) உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    அது தொடர்பான விவரங்கள் வருமாறு:-

     தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம். குரு பகவான் என்பவர் கிரகவடிவம். இவர் சிவன். அவர் பரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி.குரு அதிகாரி. தட்சிணாமூர்த்தி சிவகுரு. தெற்குநோக்கி உள்ளார். குரு தேவகுரு. வடக்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர்,சனாதனர்,சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுககு போதிப்பவர்.
    குரு பகவான் நவகோற்களில் குரு என்கின்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்கிளல் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன்தோன்றுதல் மறைதல் என்கின்றத தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம் அஸ்தமனம் என்கின்ற தன்மைகள் உடையவர்.
    இத்தனை தத்துவவேற்றுமைகளை கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர்.இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…
    தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக(சிவகுருவாக)வழிபடுங்கள். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குருபகவான் என்றே மாற்றிவிட்டார்கள்.
    அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கின்றார்கள்.குருவிற்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கின்றார்கள்.கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கின்றார்கள்.
    குருபெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் சாந்தி பரிகாரங்கள் செய்கின்றார்கள்.
    இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள்சொல்கின்றார்கள் என்கின்றபோதும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகின்றார்கள்.
    குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். அதுவும் தவறு.
    குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பரிம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. 
    எனவே தட்சிணாமூர்த்தியும் குருபகவான ஒன்றே என நம்மை நாமே குழுப்பிக்கொள்ளக்கூடாது.