காஞ்சி கருணை மகாபெரியவா , தனது அடியார்கள் மீது கருணை மழை பொழிவதில் அற்புதர். இன்றைக்கும் தனது அடியார்கள் மீது கருணை பொழிந்து கண்ணின் இமையைப் போல காத்து ரட்சிக்கிறார் காஞ்சி கருணை தெய்வம் . பக்தர்கள் வாழ்வில் மகான் செய்த அற்புதங்கள் ஆயிரமாயிரம். இரு பக்தர்கள் உள்ளம் குளிர்ந்த ஒரு சம்பவத்தை இங்கு அறிந்து கொள்வோம்…
பழையனூர் என்ற ஊர்ல மகாபெரியவாளோட பக்தர் ஒருவர் மாசத்துக்கு ஒருதரமாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊர்ல வேலை பார்த்து கொண்டு இருந்த அவரை சென்னைக்குப் பக்கத்துல வேலை மாத்தல் பண்ணி உத்தரவு வந்தது . பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்துல செலவெல்லாம்போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருந்தது.
மாசத்துக்கு ஒருதரம் பெரியவாளை தரிசனம் பண்ணினவர் ஆறேழு மாசத்துக்கு ஒருதரம்கூட வரமுடியலை. பொருளாதார நிலைமை ரொம்ப குறைந்து கொண்டே போனது .ஒருநாள் காதில் போட்டு கொண்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்தது . அப்ப ரொம்பவே மனசு உடைஞ்சு போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால நின்னு, “இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே…பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா போட்டுண்டு இருக்கிற இந்த கடுக்கன் யாரோ ஒருத்தரோட கைக்குப் போகப்போறதே. இதை மட்டும் விற்க வேண்டாதபடிக்கு என்னோட கஷ்டம் தீர்ந்துதுன்னா, இதை உங்ககிட்டேயே சமர்ப்பிச்சுடறேன்..!” என்று வேண்டிக் கொண்டார் .
கொஞ்சநேரத்துக்கெல்லாம், அவர் வேலைபார்த்த இடத்துல இருந்து ஒரு ஆள் வந்து, “சார் முதலாளி ஒங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னார்”.அவரும் உடனே போனார்
அவர் இடத்துக்குப் போட்ட புது ஆள்,கணக்கெல்லாம் தப்புத்தப்பா எழுதி வைச்சிருக்கானாம். உடனடியா சரி பண்ணியாகணும்,அதனால உங்க பழைய இடத்துக்கே மாற்றியுள்ளேன். பயணப்படி இத்யாதிக்கெல்லாம் பணம் தரச் சொல்லியிருக்கேன் என்றார் முதலாளி .
பரமாசார்யாளை வேண்டின அடுத்த க்ஷணமே தன்னோடமொத்த கஷ்டமும் தீர்ந்து சந்தோஷத்தோடு மளமளன்னு புறப்பட்டுப் போய் சேர்ந்தார்.
அப்படியே ஆறேழு மாசம் நகர்ந்தது.பரமாசார்யாளை அவர் பார்க்க வர்றதும் குறைஞ்சுது.ஒரு நாள் திடீர்னு அவருக்கு காதுல லேசா வலிக்க ஆரம்பித்து , பின் பொறுக்கவே முடியாதபடிக்கு வலி அதிகரிச்சு டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நிறைய பரிசோதனை பண்ணிவிட்டு “இது கொஞ்சம் சிவியரா இருக்கும்னு நினைக்கிறேன். அநேகமா ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கலாம். அதனால சென்னைக்குப் போய் பெரிய டாக்டர் யாரையாவது பாருங்கோ”ன்னு சொன்னார் டாக்டர்.
பதறி அடிச்சுண்டு சென்னைக்கு வந்தவர், பிரபல டாக்டர் ஒருத்தர்கிட்டே காட்டியிருக்கார். அந்த டாக்டரும் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னுசொல்லிட்டு, “நாளைக்கு கார்த்தால வந்து அட்மிட்ஆகிடுங்கோ..! அப்படி வர்றச்சே கடுக்கனைக் கழட்டி பத்திரமா வைச்சுட்டு வந்துடுங்கோன்னு சொல்லி இருக்கார் டாக்டர். அப்போதான் ஒரு விஷயம் மனசுக்குள்ளே ஞாபகம் வந்திருக்கு.
“அடடா..கஷ்டமெல்லாம் தீர்ந்தா கடுக்கனை சமர்ப்பிக்கறதா வேண்டிண்டோமே. அதை செலுத்தவே இல்லையே.கழட்டறதே கழட்டறோம் கடுக்கனை கையோடு எடுத்துண்டுபோய் ஆசார்யா கிட்டேகுடுத்துட்டு வந்துடுவோம்”னு நினைச்சவர் அவசர அவசரமாக காஞ்சிபுரம் புறப்பட்டுட்டார்.
சில வேதவித்துகள் போகிற வழியில் பெரியவாளை தரிசிக்க மடத்துக்கு வந்தார்கள்.அவர்களுக்கெல்லாம் குங்குமத்தோட ஆளுக்கு ஒரு பழமும் கொடுத்த பெரியவா கொஞ்சம் இளைஞரா இருந்த ஒருத்தரை மட்டும், “நீ கொஞ்ச நேரம் இரு,அப்புறம் போகலாம்!” என்றார். அவர்கள் சேர்ந்து வந்ததனால்,எல்லாரும் மடத்துல ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள் .
கொஞ்சநேரம் ஆச்சு. காதுவலி பக்தர் அங்கே வந்தார். தான் வேண்டிண்ட முதல் காது ஆபரேஷன் வரை எல்லாத்தையும் சொல்லி, கடுக்கனை ஒரு மூங்கில் தட்டுல வைச்சு பெரியவாளிடம் வைத்தார்.பெரியவாஒரு ஆரஞ்சு பழம் தோலை உறிச்சு,அந்த பழத்தை பக்தர்கிட்டே குடுத்து வழி அனுப்பினார்.
அடுத்ததா தன் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே “வேத வித்துகள்ல இளைஞரா இருந்தவரை கூப்பிடச் சொன்னார்!” . “என்ன, நேத்திக்கு வேதமந்திரம் சொல்றச்சே இவாள்லாம்காதுல கடுக்கன் போட்டுண்டு இருக்கா. நமக்கு வசதி இல்லாம வேப்பங்குச்சியை செருகிண்டு இருக்கோமேன்னு மனசுக்குள்ளே குறைப்பட்டுண்டியா? இந்த இதை எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ”பக்கத்தில் இருந்த கடுக்கன்களைக் காட்டிச் சொன்னார்.
எல்லோருக்கும் ஆச்சர்யம்.இளைஞர் கண்ணுலேர்ந்து ஆனந்த கண்ணீர் வழிஞ்சது.இவனுக்கு தரலாம்னு எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சார்? பெரிய ஆச்சரியம்னா, அதைவிட பெரிசா இன்னொண்ணு அடுத்த நாளே ஏற்பட்டது.
ஆபரேஷன் பண்ணிகறதுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனவர் தன்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதை உணர்ந்து டாக்டர்கிட்டே சொன்னபோது, எதுக்கும் இன்னொருதரம் செக் பண்ணினடாக்டர்,ஆபரேஷனேவேண்டாம். சாதாரண மருந்துல குணமாகிவிடும்ன சொல்ல, அதே மாதிரி குடுத்த சொட்டு மருந்துல ஒரு வேளைலே அவர் காதுவலி காணாமல் போய் விட்டது .
காது வலி மட்டுமல்ல பக்தரின் மன வலியும் பறந்தே போய் விட்டது.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ மகாபெரியவா சரணம்…





ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை மக்களுக்கு இன்னொரு தீபாவளி போன்றது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் அணிந்து வரும் உடையை பொறுத்தே அந்த ஆண்டில் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஊகிக்கப்படும். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அழகர் பச்சைபட்டுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர் சேவையுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வைகையில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரை புறப்பட்டார்.







