viyapputum viralgalin atral

கழிவு நீக்கும் முத்திரை….

அண்டத்தில் உள்ளதே, பிண்டத்திலும் உள்ளது என்று சித்தர் பெருமாட்டி ஔவைப்பாட்டிகூறியதில் இருந்து நமது உடல் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுள் உறுபொருள் கண்டேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்கிறார் திருமூலர் பெருமான்.

உடல் என்பது ஒரு இழுக்கானது என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். அந்த உடலுக்குள் ஒரு மிகவும் ஆற்றல் வாய்ந்த, கற்பனை கூடச் செய்து பார்த்திர முடியாத ஒரு பொருள் இருப்பதைக் கண்டு கொண்டேன். எனவே நான் உடலைப் பேணி வளர்க்கிறேன், அதன் மூலம் உயிரையும் பேணி வளர்க்கிறேனே என்கிறார் திருமூலர்.

எனவே, உடல் என்பதும், அவ்வுடலுக்குள் குடி கொண்டிருக்கும் அந்த இறைப் பொருளை உணர்ந்தவர்களே பேரரறிவாளர்கள் எனும் சித்தர் பெருமக்களாக உள்ளதை நாம் உணர முடிகிறது.

அப்படிப்பட்ட உடலை நாம் பேணிக்காப்பது என்பது உயிரையும், அந்த உயிருக்குக் காரணமாக இருக்கும் இறை ஆற்றலையும் நாம் உணர்வதற்கான வழி முறையாகவும் சித்தர் கூற்றை நாம் புரிந்து கொள்ளலாம்.

அது மிக உயர்ந்த ஒரு உணர்வு நிலை எனினும், நமது அன்றாட வாழ்வில் இயன்றவரை ஊசி, மாத்திரை, மருத்துவத்திற்குச் செல்லாமல் நம் உடலைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடலைப் பாதுகாத்துக் கொள்ளவுமே, சித்தர் பெருமக்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளவை ஓகக் கலைகள்.

இந்த ஓகத்திற்கு வடமொழியாளர்கள் யோகம் என்று பெயர் சூட்டிவிட அதுவே பிரபலமானது. ஆனால், நாம் ஓகம் என்றே அழைப்போம்.

அந்த ஓகக்கலைகளில் ஒன்றுதான் முத்திரை ஓகம். கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் இந்த முத்திரை ஓகத்தை அழியாது காத்துக் கொண்டு, சந்ததிதோறும் கடத்திக் கொண்டு செல்வதில் பரதநாட்டியம் எனப்படும் சதிர் ஆட்டத்திற்குப் பெரும் பங்கு உள்ளது.

சரி, இப்போது நாமும் அந்த முத்திரை ஓகத்தைக் கற்றுக்கொள்வோம். மிக எளிய பயிற்சியான இதனை நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, பேருந்தில், ரயிலில், விமானத்தில பயணித்துக் கொண்டே, நண்பர்களுடன், குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக் கொண்டே செய்யலாம். அவ்வளவு எளிதான ஓகமே முத்திரை ஓகம்.

உச்சந்தலையில் தொடங்கி கால்பாதம் வரை அனைத்து உடல் உறுப்புகளுக்குமான ஓகப் பயிற்சிகளைக் கொண்டது முத்திரை ஓகம்.

முத்திரை ஓகம் என்றவுடன் ஏதோ பெரிய கடினமான பயிற்சி என்று எண்ணிவிடவேண்டாம்.  நாம் கூறியபடியே மிக எளிதான பயிற்சியே.

சரி…

முதலில் இந்த ஓகப்பயிற்சியை எப்போது செய்யலாம் ?

காலை எழுந்தவுடன் உணவுக்கு முன், மதியம் உணவுக்கு முன், மாலையில் உணவுக்கு முன் அல்லது உணவு அருந்திய ஒரு மணி நேரம் கழித்து இப்பயிற்சிகளைச் செய்யலாம்.

உணவு சீரணம் ஆவதற்கு என்று சில முத்திரைகள் உள்ளன. அவற்றை உணவை அருந்திய சில நிமிடங்களில்கூட செய்யலாம்.

எனினும், இப்போதைய காலகட்டத்தின் அடிப்படையில், உணவிலேயே ரசாயன நச்சுகள் கலந்துவிட்ட காலத்தின் அடிப்படையில் முதலில் , கழிவு நீக்கும் முத்திரையில் இருந்து தொடங்குவதையே பெரும்பாலான முத்திரை ஓகப் பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அது ஒருவகையில் லாஜிக்காகவும் சரியானதே. காரணம், நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவது முதல்கட்டமாக இருப்பது நல்லதுதானே.

இந்த கழிவு நீக்கும் முத்திரையை குறைந்தது மூன்று வாரங்கள் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். அதன்பிறகு மாதம் ஒருமுறை செய்தால் போதுமானது.

இந்த முத்திரை செய்தபின் தண்ணீர் சற்று அதிகம் குடிப்பது நல்லது.  பசி உணர்வில் சில மாற்றங்கள் வரலாம் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது அல்லது வயிற்றுப்போக்குகூட ஒன்றிரு முறை நிகழலாம். இது இந்த முத்திரையைத் தவறாது செய்து வந்தால் சிலருக்குத் தோன்றக்வடிய விளைவுகள். அதுபோன்ற வேளைகளில் எலுமிச்சை சாறு, வெந்நீர், மோர் ஆகியவற்றைக் குடிக்கலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணலாம்.

இந்தப் பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 25 நிமிடங்கள் செய்யலாம். அல்லது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களில் தலா 15 நிமிடங்கள் என ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் வரை செய்யலாம்.

தரையில் அமர்ந்திருந்தாலும், இருக்கையில் (நாற்காலி) அமர்ந்திருந்தாலும் முதுகெலும்பு நேராக இருக்கமாறும், தலை நிமிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம்.

முத்திரை செய்யும் முறை.

நமது இரண்டு கைகளையும் குவித்து வணக்கம் செலுத்துவது  போல சில நிமிடங்கள் வைத்து இக்கலையை நமக்கு அளித்த சித்தர் பெருமக்களுக்கு நன்றி கூறியபடி தொடங்கலாம்.

அதன் பிறகு இரண்டு கைகளையும் நமது தொடை மீது வைத்துக் கொண்டு, பெரு விரலின் நுனியை மோதிரவிரலின் கீழ்ப்பகுதியில் இறுதிக் கணுவில் (கையோடு சேர்ந்திருக்கும் பகுதி) தொட்டுக் கொண்டிருப்பதுபோல வைக்க வேண்டும். மற்ற விரல்கள் விரிந்த நிலையில் இருக்கலாம். அதிக அளவு அழுத்தம் தேவையில்லை.

இவ்வாறு தொடர்ந்து 45 நிமிடங்களோ அல்லது மேலே குறிப்பிட்டதுபோல 15 நிமிடங்களாக நாளொன்றுக்கு மூன்று முறையோ செய்யலாம்.

இவ்வாறு மூன்று வாரங்கள் செய்தால் நமது உடலில் நச்சுக்கள் படிப்படியாக வெளியேறி உடல் ஊக்கமும், உற்சாகமும் பெறும்.

செய்து பார்க்கலாமா?

பலன்கள் :

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மைவிட்டு வெளியேறும். குறிப்பாக மது அருந்தும் வழக்கமுடையவர்கள், காபி, தேநீர் போன்றவற்றை குடித்தே ஆகவேண்டும் என்ற உணர்வு பெறுபவர்களுக்கெல்லாம் அதைத் தேவைப்பட்டால் அருந்தலாம் அல்லது அருந்த வேண்டிய கட்டாயம் இல்லை எனும் நிலை ஏற்படும். தேவையற்ற கொழுப்புகள் கரைய வாய்ப்புண்டு. உடல் தூய்மை பெறுவதால் மனதும் ஊக்கம் பெறும். 

குறிப்பு : இது ஒரு உடல் பயிற்சிக் கலையே. இதனைச் செய்யும்போது வழக்கத்துக்கு மிக மாறாக உடலில் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்தால் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். எனினும் எந்தவிதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் தவறான பயிற்சி அல்ல இது. பயிற்சிகள் செய்து பார்த்து பலன் இருந்தால் மட்டும் தொடர்ந்து செய்யலாம். 

-விஷ்வா விஸ்வநாத்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *