2018-04-11-15-07-35

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விஷூ பண்டிகையின் போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்குரிய விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
வருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் நிகழ்ச்சியுடன், பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.
தொடர்ந்து சித்திரை மாத பூஜைகள் நடைபெறுகின் றன. இந்த பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 18- ந் தேதி வரை திறந்திருக்கும் என்பதால், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *