vellay-murukar

 

திர்வேலே மூலவராக விளங்கும் ஆலயம், சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்த குமரன் கோவில், ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடையே அமைந்த திருத்தலம், முருகனைத் தேடி வெள்ளை மயில் வந்து திருவிளையாடல் புரிந்த தலம், ஆன்மிகப் பணியோடு, சமுதாயப் பணியையும் இணைத்து செய்யும் பொது நலக்கோவில், சித்திரைத் தேர் கொண்ட ஆலயம், சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை சுவிட்சர்லாந்து நாட்டிலும் நிரூபித்திருக்கிறார் முருகப்பெருமான்.   ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில், ஜீவநதியான ரைன் நதிக் கரையோரம் எழுந்தருளியுள்ளார், ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி. சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாட்டின் எல்லையோர மாவட்டமாக விளங்குவது செங்காலன். இதில் சென்மார்க்கிறேத்தன் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம். வேலும், மயிலும் பிரதானமாக விளங்கும் ஆலயம் இது. இவ்வாலயம் பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

தாமாக வந்த வெள்ளை மயில் 

கதிர்வேலாயுத சுவாமி ஆலயப் பகுதிக்கு கடந்த 2010–ம் ஆண்டு ஒரு வெள்ளைநிற மயில் ஒன்று தாமாகப் பறந்து வந்து சேர்ந்தது. அங்கே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இது வியப்பாக இருந்தது. உடனே அருகில் இருந்த ஆலய நிர்வாகியிடம் இத்தகவலைக் கூறினர். அந்நாட்டு வனவிலங்கு சட்டப்படி, உடனே அவரும் இதனைக் காவல்    துறைக்குத் தெரிவித்தார். அத்தோடு தங்கள் ஆலய தெய்வமான       முருகப்பெருமானைப் பற்றியும், முருகனின் வாகனம் மேற்படி மயில் என்பதையும் எடுத்துக் கூறினார். அதனால் அவர்கள் எவராவது உரிமை கோரினால் திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஆலயத்தின் வசம் மயிலை காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை எவரும் அந்த மயிலை உரிமை கோரவில்லை. அபூர்வ பறவையான வெள்ளை மயில், கந்த சஷ்டி நாளில்  இந்த ஆலயத்தைத் தேடி பறந்து வந்த நிகழ்வு அப்பகுதிவாழ் மக்களாலும், பக்தர்களாலும் இன்றும் வியப்பான செய்தியாகப் பேசப்படுகிறது. 

வேலே முருகர்

முருகப்பெருமானின் திருக்கோவில்களில் வேலுக்கும் முக்கியப் பங்குண்டு. முருகனின் அருவுருவத் திருக்கோலம் ‘வேல்’ ஆகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், மூலவராக விளங்கும் முருகப்பெருமானின் வேலாயுதம். இந்த வேலினை மையமாக வைத்தே ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிறகு இதை நோக்கினால் முருகப்பெருமானே நேரில் காட்சி தருவது போலத் தோன்றுகிறது.

ஆலய அமைப்பு

இவ்வாலயம் சென்மார்க்கிறேத்தன் என்ற கிராமத்தில், தொழிற்சாலைப் பகுதியில் பிரமாண்ட தனிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது.  அயல்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாட்டு கட்டிட பாணியில் அமைந்துவிட்டது போலும். எளிய நுழைவு வாசல், நுழைந்ததும், சில படிகள் ஏறினால் ஆலயம் நம்மை வரவேற்கிறது.

வேல்கள் தாங்கிய கதவுகள் வழியே உள்ளே நுழைந்ததும், விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். அருகே எளிய கொடிமரம், மயில் மூலவரை தரிசித்த வண்ணம் காட்சி தருகின்றன. மூலவராக முருகப்பெருமானின் வேல் அழகுற அலங்கரிக்கப்பட்டு நமக்கு காட்சிதருகின்றது. இடது பின்புறம் விஷ்ணு துர்க்கை அழகுற வீற்றிருக்கிறாள். எதிரில் சண்டிகேசுவரர், பைரவர் காட்சி தருகின்றனர். அருகே அலங்கார மண்ட பத்தில் விநாயகர், வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் என அனைத்து வித உற்சவ மூர்த்திகளும் அழகுற வடிவமைக்கப்பட்டு காட்சியளிக்கின்றனர். மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் அனைத்துமே ஐம்பொன் சிலைகளால் அமைந்துள்ளது தனிச் சிறப்பு அம்சமாகும். 

ஆண்டுதோறும் வைகாசி விசாக பட்சத்தை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு நாட்கள் பிரமோற்சவமும் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவில் முக்கிய அம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கென  மரத்திலான பெரிய சித்திரைத்தேர் இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் காவடி எடுத்தல், பால் குடம், தீச்சட்டி, அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்    கணக்கில் பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, தைப்பொங்கல், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆலய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாவான தைப்பூசம், கந்தசஷ்டி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


தரிசன நேரம்

இவ்வாலயம் நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சிறப்பு நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். 

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாலயம் சமயத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து மக்களை நெறிப்படுத்துகின்றது.  அத்துடன் தங்கள் தாய்நாட்டில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

இதுமட்டுமின்றி, சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இவ்வாலயம் உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

தலவரலாறு

2005–ம் ஆண்டில் சிறிய அளவில் தமிழர்கள் வழிபாடு செய்ய தொடங்கப்பட்ட இந்த ஆலயம், தனி ஆலயமாக மாற்றம் பெற்று 2007–ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் பின் இப்பகுதியில் தமிழர்கள் பங்களிப்பும் அதிகமாகி வர, அவர்களின் வருகையும் கூடியது.  பக்தர் களின் வேண்டுதல்களை கதிர்வேலாயுதசுவாமி நிறைவேற்றித்தர, பக்தர்கள் வருகையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.  அயல்நாட்டினரும் இவ்வாலயத்தை வியப்புடன் தரிசித்துச் செல்கின்றனர்.

சுவிட்சர்லாந்து  நாட்டின் கிழக்கு மாநிலம் செங்காலன். இதன் முக்கிய ஊராகத் திகழ்வது  சென்மார்க்கிறேத்தன். ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடைப்பட்ட பகுதியில்   இயற்கை எழில் வாய்ந்த ஊரில் அமைந்துள்ள திருக்கோவில் இது.

ஜுரிச்சிலிருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயில் வழித்தடத்தில், ஜுரிச்சின் மாநகரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், செங்காலன் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. அல்ரன்றைன் என்ற உள்நாட்டு விமான நிலையம் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்திரியா எல்லை 200 மீட்டர் தூரத்திலும், ஜெர்மனி எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *