2016-08-20-12-19-21

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருநாள் விழா 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. ஆகஸ்டு 26 மற்றும் 27-ந்தேதிகளில் இந்த திருவிழா நடக்கிறது.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையட்டி ஆகஸ்டு 26-ந்தேதி காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 10.30 மணிக்குஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபம் சேருதல், 11 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுதல், பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல், 2.30 மணி முதல் 5 மணி வரை மண்டபத்தில் பொது ஜனசேவை, மாலை 5.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடு, மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை உண்டு. பூஜை காலமான காலை 7.15 மணி முதல் 10 மணி வரை மூலவர் சேவை கிடையாது. காலை 10 மணி முதல் 5.15 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

ஆகஸ்டு 27-ந்தேதி காலை 7.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு, காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணர் சன்னதிக்கு வந்து சேருதல், மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடும், மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபம் சேருதலும், மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடும், இரவு 8.15 மணிக்கு சித்திரை வீதிகள் வலம் வந்து உறியடி கண்டருளுதலும், இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருதலும் நடக்கிறது.

இதையடுத்து 27-ந்தேதி காலை 7.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் மூலவர்சேவை உண்டு. பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜைகாலமாகும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *