2016-07-21-05-12-48

உழைப்பயே தாரக மந்திரமாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்களிடம் சேமிக்கும் வழக்கம் நிறைந்து இருக்கும். குடும்பத்தை விட உங்களது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நயமான வார்த்தைகள் பேசி அனைவரையும் கவர்வீர்கள். எந்த விஷயத்தை செய்தாலும் ஆராய்ந்து செல்வதன் மூலம் வெற்றிகளை அடைவீர்கள்.

 

உங்களின் அயன போக ஸ்தானத்திலிருந்து சுய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம்.  அதே வேலையில் இந்த குருப் பெயர்ச்சியால் தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள்.

 

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும்.

 

வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள். அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடமிருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

 

பண வசதிக்கு எந்தக் குறைவும்  ஏற்படாது. என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

 

உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம்  எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும்.

 

செய்தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வீர்கள்.

 

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும்.  மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும். வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

 

வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த   லாபம்   கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

 

கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள். அதேநேரம் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள்.  அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும்.

 

பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

 

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

 

உத்திரம்:

இந்த குருப் பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்வது  நன்மை தரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது  நன்மைதரும்.  

 

ஹஸ்தம்:

இந்த குருப் பெயர்ச்சியால் வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும்.  விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை  காணப்படும்.

 

சித்திரை:

இந்த குருப் பெயர்ச்சியால் திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல்  பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக  நேரிடலாம்.

 

 

 

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.  “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *