நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாவலடி கருப்பசுவாமி திருக்கோவில் உள்ளது. முற்காலத்தில் வணிகர்கள் சிலர் ஊர் ஊராகச் சென்று' தங்களது வணிகத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இரவு நேரம் ஆகிவிட்டது. இதனால் வழிப்பறி கொள்ளையர்களுக்கு, பயந்து அன்று இரவு மட்டும் இப்பகுதியிலேயே தங்க முடிவு செய்து.
அங்கிருந்த நாவல் மரத்தடியில்'தங்கினார் அப்போது தங்களிடம் இருந்த பொற்காசுகளை கள்வர்களுக்கு பயந்து பூமியில் குழி தோண்டி அதில் புதைத்து வைத்துவிட்டு, அதன் மீது படுத்து உறங்கினர் பொழுது விடிந்ததும், சொந்த ஊர் திரும்புவதற்காக புதைக்கப்பட்ட பொற்காசுகளை எடுப்பதற்காக மீண்டும் குழி தோண்டிய போது அதன் மீது சிறிய கல் ஒன்று இருப்பதை கண்டு, அக்கல்லை எடுக்க முற்பட்டனர். ஆனால்' அதனை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அப்போது வணிகர் ஒருவரின் உடலில் இறங்கிய கருப்பசுவாமி, தான் சுயம்புவாக தோன்றியுள்ளதாகவும், இந்த இடத்திலேயே தங்கி கிராம மக்களுக்கு துணையாக நின்று அருள் புரிய விரும்புவதால், கல் இருக்கும் இடத்தை சுற்றி கோவில் கட்டுமாறு, அருள்வாக்கு கூறியுள்ளார்.
அதன்படியே கிராம மக்கள் அவ்விடத்தில் அருள்மிகு ஸ்ரீ கருப்புசாமிக்கு திருக்கோவில் கட்டி இன்று வரை வழிபட்டு வருகின்றனர். நாவல் மரத்திற்கடியில் நின்று கருப்புசாமி கோவில் கொண்டதால்' காவல் தெய்வத்திற்கு' “நாவலடியான்” என்ற திருப்பெயரும் உண்டு. கருவறையில் ஸ்ரீ கருப்புசாமி முதன்மை கடவுளாக காட்சி தருகிறார். தாயார் அருள்மிக ஸ்ரீ செல்லாண்டியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு செல்லமாக வேண்டிய வரங்களை அள்ளித் தருகிறாள்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்