கர்நாடக மாநிலம் தெட்சிண கன்னாடா மாவட்டம் பெல் தங்கடி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதர் திருக்கோயில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் குடுமபுரம் என்ற பெயரில் விளங்கியது. இந்த ஊரின் நாட்டாமையாக பரமண்ணா ஹெக்டே என்பவர் இருந்தார். அப்போது ஒரு நாள் யானை, குதிரை ஆகியவற்றில் வந்த சிலர் தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதாகவும், நீண்ட தூர பயணத்தின் காரணமாக களைப்புடன் இருப்பதால், சற்று ஓய்வெடுக்க ஏதேனும் இடம் கிடைக்குமா ? என ஊரிலிருந்து சிலரிடம் விசாரித்தபோது, நாட்டாமையின் இருப்பிடத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு தேடி வந்தவர்களை வரவேற்று அவர்களின் தாகம் தீர இளநீர், கொடுத்து உபசரித்து சற்று ஓய்வு எடுக்குமாறு மதிய உணவு அருந்திவிட்டு வெயில் மறைந்த பின் பயணத்தை தொடருங்கள் என வந்தவர்களிடம், நாட்டாமை ஹெக்டே, கூறிவிட்டு, விருந்தினர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தார். அவர்களும் உணவை அருந்தி விட்டு, திடீரென நாட்டாமை ஹெக்டேவிடம், நாங்கள் இந்த வீட்டிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறோம். எனவே" உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் உடனே ' வெளியேறுங்கள் என உத்தரவிட்டனர். தர்மசீலரான ஹெக்டே, மறுவார்த்தை கூறாமல் குடும்பத்தினருடன் தனது வீட்டில் இருந்து வெளியேற தயாராகி விட்டார்.
ஹெக்டேவின் இந்த செயலை கண்டவர்கள். ‘நாங்கள் சிவபெருமானின் ஆணைப்படி உங்களின் இருப்பிடத்திற்கு வந்த தர்மதேவதைகள். இங்கு ஈசன் குடி கொள்ள போவதால் இந்த குடுமபுரம் வரும் காலத்தில் ஒரு புண்ணிய பூமியாக திகழப் போவதாகவும், இங்கு நீங்கள் தான் ஜோதி வடிவான இறைவனுக்கு கோவில் கட்டி வழிபாடுகள் நடத்த வேண்டும், என்பது சிவனின் கட்டளை என்றும் எனவே" அதற்கான சோதனை தான் தற்போது உங்களுக்கு நடத்தப்பட்டது. தன்னலம் இன்றி பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற தன்னலமில்லாத உங்களின் குணத்தை பரிசோதிக்கத்தான் இந்த நாடகம்.
நீங்கள் கட்டப்போகும் இந்த திருக்கோவிலில் கன்னியாகுமரி அம்மனையும், மஞ்சு நாதரையும், தர்மதேவதை சிலையையும் வைத்து வழிபட வேண்டும். இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் அதன் மூலம் மகிழ்ச்சி அடையும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தொகையை வைத்து. நீங்கள் தர்ம
காரியங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் அந்த சிவபெருமான் காத்தருள்வார்;" என கூறி அந்த தேவதைகள் வின் நோக்கி மறைந்து விட்டனர்.’ தர்ம தேவதைகளின் கட்டளைப்படி நாட்டாமை ஹெக்டேவும் தொடர்ந்து. பல தர்ம காரியங்களை செய்து வந்தார். இதனால் இந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது. நாட்டாமை ஹெக்டேவுக்கு பிறகு தலைமுறை தலைமுறையாக அவரது, சந்ததியினர் இந்த தர்ம காரியத்தை விடாமல் இன்று வரை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஊர் மக்கள் நாட்டாமை ஹெக்டேவின் குடும்பத்திற்கு தொடர்ந்து மரியாதை அளித்து கௌரவித்து வருகின்றனர். அவரது வம்சாவழி வாரிசுகளும் நீதிநெறி தவறாமல் தர்மத்தின் பக்கம் நின்று இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதரின் சன்னிதியின் வலது புறம் தர்ம தேவதைகளுக்கும், அன்னை ஸ்ரீ கன்னியாகுமரி அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா 'அன்ன சத்திரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்