Tag: vazipadu

  • Sarabeswara vazipadu

    இந்த உலகமும் மானுடமும் மேன்மை அடைய சிவா பெருமான் எடுத்து வந்த அவதாரங்கள் எண்ணில் அடங்காது. அவற்றில் குறிப்பாக சரபேஸ்வரராக எடுத்த வடிவம் வெகு சிறப்பு மற்றும் சக்தி வாய்ந்தது. தான் என்ற அகந்தை கொண்டு திரிந்த ஹிரண்ய கசிபுவின் செய்த தெய்வ நிந்தனையை தாங்காது பிரகலாதன் வேண்டியபடி , தூணைப் பிளந்து உக்கிரமாக வெளிவந்தார் எம்பெருமான் நரசிம்மர்.

     ஹிரண்ய கசிபுவின் நெஞ்சைப் பிளந்து, குடலை உருவி மாலையாக அணிந்து அவன் உடலில் இருந்து வழிந்த உதிரம் குடித்து, அவன் கதை முடித்தும்,உக்கிரம் தணியாமல் , கோபம் கொப்பளிக்க அவன் அழிவு சக்தியாக ஆர்ப்பரித்து எழுகையில், தேவர்களும் முனிவர்களும் செய்வது அறியாமல் சிவபெருமான் திருவடியில் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான்,பறவையும், மனித உடலும், மிருகமும் கலந்த ஒரு மகா பயங்கர வடிவெடுக்கிறார் .

    அவரே சரபேஸ்வரர் என போற்றப்படுகிறார் . சரப திருவுருவின் நிழல் பட்ட உடனே ஆக்ரோஷம் மேலிட வந்து கொண்டிருக்கும் நரசிம்மரின் உக்கிரம் தணிகிறது . உக்கிர நரசிம்மரின் அவதாரத்தினை, சாந்த நரசிம்மராய் , லட்சுமி நரசிம்மராய் வெளிப் பட்ட கோபத்தை தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்டு சாந்த ரூபமாக, விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வரன் சகல சத்ரு விநாசராகவும் பிறவிப் பிணியை நீக்குபவராகவும், கஷ்டங்களை போக்குபவராகவும் அருள் பாலிக்கிறார் .

    பிரதோஷ நேரத்தில் தான் ஜோதி பிழம்பான சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷதினை தணித்தார். எனவே, பிரதோஷ காலத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் நமக்கு தருகிறது.
     

  • Kula Deiva vazipadu

    குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்கலாம்.

     சாதரணமாக கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது. நமது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
     
    குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும். குலதெய்வங்களான அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் ஆகியவை ஆகும்.  எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
     
    ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. தங்கள் குடும்பத்துக்கும், உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது வளமையான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். குல தெய்வ வழிபாடில்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை. எனவே இவ்வழிபாடு எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகின்றது.
     
    வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்கு நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளை துவக்குவதும் நாம் கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது.
     
    குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. மேலும் குல தெய்வ சாபம் வம்சத்தை சீரழிக்கும் போன்றவற்றை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.