Tag: vazihpadu

  • Shakthi vazihpadu

    ஆதி சக்தி என்றால் "முதல் சக்தி" என்று அர்த்தமாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வசிக்கின்ற தொடக்கநிலை சக்தியாகும். இந்த சக்தி பெண்மை வடிவமாகும். சக்தி என்பது அண்டசராசத்தில் உள்ள உயிரனங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு கருத்தமைவு அல்லது மனிதப் பண்புகளை மனிதர் அல்லாதவைகளுக்கு ஏற்றிச் சொல்லும் தெய்வீக பெண்மை வடிவமாகும்.

    சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார். “ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. 

    “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும். அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும்.  மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும்.

    சக்தியை வழிபடும் ஸ்லோகம்………

    “ யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!”
    என்கிறது தேவி மஹாத்மியம்.

    இதன் பொருள்:
    “எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்.