Tag: varam tharum

  • Varam tharum varahi thudhi maalai

    வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
    மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

     வாழ்த்துதல் (உலக மாரணம்)

    வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
    பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
    பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
    விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

     நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

    வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
    கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
    சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
    மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

     புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

    பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
    கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.

     மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

    தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
    சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
    வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
    தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

    தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

    ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
    கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
    சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
    வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

    தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

    தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
    பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
    நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
    உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
     

  • varam tharum vayaloor murugan

    குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக…. பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது …என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..

    வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம். 

    இனி கோயிலை பற்றி…

     

    இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது.  ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம்.  அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

    ‘அருளில் சீர் பொய்யாத கணபதி

    திருவக் கீசன் வாழும் வயலியில்

    அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’

    இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

    அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன்.  அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.

    .பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?

    அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..

    கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

    இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.
     

  • Ketkum varam tharum Poiyamozhi vinayakar

    குள்ள குள்ளனே.. குண்டு வயித்தனே..
    வெள்ளிக்கொம்பனே.. விநாயக நமஸ்தே.

    எதுவானாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் நாம், முழு முதல் கடவுளாக வழிபடுவது அந்த பிள்ளையாரைத்தானே. 

    கொஞ்சமாய் மஞ்சளை பிடித்துவைத்தாலே அங்கு வந்துவிடும் பிள்ளையார், ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலுமாக அமர்ந்து கொண்டு கேட்டவர்க்கு கேட்ட வரம் தருகிறார். 
    அப்படிப்பட்டவர் விழுதே விடாத ஆலமரத்தின் அடியில் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் இடம் எது என்று தெரியுமா?

    பொய்யாமொழி விநாயகராக தீவனூர் என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கிறார். 
    திண்டிவனம் – செஞ்சி சாலையில் தீவனூர் என்ற சிறிய கிராமத்தில் பெரிய குளத்தருகே சுயம்புவாக இருக்கிறார். 
    கோயிலுக்கு செல்லும் பாதையில் முதலில் ஆதிவிநாயகர் கோயில் சிறியதாக காட்சியளிக்கும். பொய்யாமொழி பிள்ளையாரை பார்ப்பதற்கு முன் ஆதி விநாயகரை பார்த்து ஒரு கற்பூரம் ஏற்றிவிட்டு செல்வார்கள். 

    பின்னர் குளக்கரையை கடந்து சென்றால், தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார் கோயிலுக்குள் நுழையலாம்.
    சுயம்பு வடிவில் லிங்கமாக காட்சியளிக்கும் பிள்ளையார், கணபதி லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். அபிஷேக ஆராதனைகளின்போது அவரின் பிள்ளையார் ரூபத்தில் துதிக்கையுடன் வெளிப்படுவதை பார்க்க முடியும். 

    முன்னொரு காலத்தில் இந்த கோயில் பூசாரி, வியாபாரி ஒருவரிடம் பூஜைக்கு மிளகு கேட்க, அந்த வியாபாரி கொடுக்க மனமில்லாமல் உளுந்துதான் இருப்பதாக கூறிவிட்டார். பின்னர் வியாபாரத்திற்கு போன இடத்தில் அவரது அத்தனை மிளகு மூட்டைகளும் உளுந்து மூட்டைகளாக மாறிப் போயிருந்தன. எனவே, சொன்ன மொழியை உண்மையாக்கிய இவர் பொய்யாமொழி விநாயகராக அழைக்கப்படுகிறார். 

    இக்கோயிலில் கொடி மரத்திற்கு வலப்புறம் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கொடிமரத்தை கடந்து சென்ற உடனேயே பொய்யாமொழி பிள்ளையாரை பார்க்கலாம். அண்மைக் காலத்தில்தான் கோயில் புனரமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் வழக்கம்போல குளக்கரை பிள்ளையாராகத்தான் இருப்பார்.

    குளக்கரையை ஒட்டி காணப்படும் ஆலமரங்கள் விழுதுவிட்டு காட்சியளிக்கும் நிலையில், கோயிலுக்கு பின்புறம் 3 ஆலமரங்கள் உள்ளன. மூன்றும் சிவன், பிரம்மா, விஷ்ணுவாக கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். இந்த மூன்று ஆலமரங்களும் விழுதில்லா மரங்கள் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.

    பிள்ளையாரை வணங்குபவர்கள், இம்மரங்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். அந்த இடத்தில் பொங்கல் வைக்கவும், காதுகுத்து போன்ற எளிய குடும்ப விழாக்களுக்குமாக இடம் இருக்கிறது. எப்போது அங்கு சென்றாலும் யாராவது பொங்கல் வைப்பதும் புதுமணத் தம்பதியர் வந்து ஆசி பெற்றுச் செல்வதுமாக இருப்பார்கள். 
    திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. 

    பல ஜமீன்தார் பரம்பரையினரும், அவர்களை சார்ந்தவர்களும் குலதெய்வமாக வழிபட்ட வரலாறு கொண்டவர் பொய்யாமொழி விநாயகர். அந்த காலத்தில் பல குடும்பங்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவர். ஆண்டுக்கு ஒருமுறையாவது இக்கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவது இன்றும் பல குடும்பங்களின் வழக்கமாக உள்ளது. 

    இவரிடம் கேட்ட வரத்தை பொய்க்காமல் நிறைவேற்றித் தருபவர் என்பதாலும் பொய்யாமொழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இதனால் பொய்யாத வரம் தரும் பிள்ளையாரை ஒருமுறை தரிசித்துவிட்டு வரலாமே..

    பாலும் தெளிதேனும், பாகும் 
    பருப்பும் இவை நான்கும் கலந்த
    நான் உனக்குத்தருவேன்
    கோலம் செய்
    துங்கக் கலிமுகத்துத் தூயவனே 
    நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!

    -பாமா, எழுத்தாளர்