Tag: Vallar

  • Vallar Part 7

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 7

    எளிமையாய்
    அதிராமல் உலாவும் 
    வழக்கம் கொண்ட
    வள்ளல் பெருமான்
    ஒருமுறை 
    மதியவேளை 
    ஞான சபையை விட்டு வெளியே கிளம்பினார்

    சூரியன் சுட்டெரிக்கும் 
    கடும் வெயில் நேரம்.

    சபை அன்பர் 
    சண்முகம் பிள்ளை 
    பெருமானைக்
    காணவில்லை என்று கொஞ்ச நேரம் கழித்து
    தேடிப் போனார்.

    சற்று தூரத்தில் பெருமானாரின் 
    உடல்  
    தலை வேறு உடல் வேறு கைகள் வேறு வேறென அக்கக்காய் அங்கங்காய்
    பரவிக் கிடந்தன.

    பயந்துபோன 
    சண்முகம் பிள்ளை
    அரண்டு போய் கத்த
    உடலைச் சீராக்கிக் கொண்ட வள்ளல் பெருமான்….

    "இங்கு கண்டதை 
    யாரிடமும் சொல்லாதே..! இனி இப்படி 
    என்னைப்
    பின் தொடர்ந்து வராதேங்காணும்..!" 
    என உத்தரவு போட்டார்.

    இன்னொருமுறை 
    வெயிலில் நடந்து கொண்டிருந்த 
    வள்ளல் பெருமானை அன்பர்கள் பார்த்தபோது பயந்து ஒதுங்கினர். பரவசமடைந்தனர்.

    அதற்கு காரணம் 
    இருந்தது.

    வானத்து சூரியனுக்கும் வள்ளல் பெருமானின் 
    உச்சந்தலைக்கும் 
    இடையே 
    சூரியப் பேரொளி 
    நீள் ஒளித் தூணாய் 
    ஒளிமயக் கம்பாய் 
    ஒளிர்ந்து கொண்டிருந்தது.

    அக்காலத்தில்
    வள்ளல் பெருமான் மீது வழக்கொன்று நடந்தது மஞ்சக்குப்பம் கோர்ட்டில்.

    வழக்குப் போட்டவர் இலங்கையும் இந்தியாவும் போற்றிய நற்றமிழ் அறிஞர் சிவநேய சைவச் செல்வர் நாவலர் ஆறுமுகனார்.

    சிதம்பரத்தில் பெருமானும் பெருமானின் அன்பர்களும் நாவலரை நயமில்லாமல் நாகூசப் பேசி விட்டார்கள் என்பதே வழக்கு.

    அது ஓர் 
    அவதூறு வழக்கு. 

    தில்லை தீட்சிதர்கள் 
    ஐவரும் பெருமானும் 
    குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆறாவது நபரே 
    நமது நாயகர்.

    திரு என்னும் 
    மதிப்புமிகு சொல்லை திருஅருட்பாவிற்கும்
    திரு அருட்பிரகாச வள்ளலாருக்கும்
    சேர்க்க கூடாது 
    என்பதில் நேர்ந்த தகராறை ஒட்டிய விவாதத்தில் 
    எழுந்த வழக்கு அது.

    வழக்கு துவங்கும் நேரம்.

    'வள்ளல்பெருமான் கோர்ட்டுக்குச் செல்வார்,
    உடன் செல்லலாம்' என அன்பர்கள் 
    தருமச்சாலையில் 
    அவர் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.

    கதவு திறந்த பாடில்லை. உள்ளே மெல்லிய ஒலியில் பிரார்த்தனை கீதம் 
    எழுந்த வண்ணம் இருந்தது.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

    அதேநேரம் 
    'ராமலிங்க பரதேசி 
    ராமலிங்க பரதேசி 
    ராமலிங்க பரதேசி'
    கடலூர் கோர்ட்டில்  அழைத்தார் 
    கோர்ட் பணியாளர்.

    எங்கிருந்து வந்தாரோ 
    எப்படி வந்தாரோ 
    திடுமென வந்த 
    வள்ளல் பெருமான் 
    கோர்ட் அறைக்குள் நுழைந்தார்.

    கோர்ட்டில் வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலர் 
    வள்ளலைப் 
    பார்த்த மாத்திரத்தில் தன்னையும் அறியாமல் கைகளைக் குவித்து வணங்கியபடி 
    தன் இருக்கையை 
    விட்டு எழுந்தார்.

    அவரது ஆதரவாளர்களும் அப்படியே எழுந்தனர்.

    இதைக் கவனித்த 
    ஆங்கிலேய நீதிபதியும் அனிச்சையாய்
    எழுந்தார்.

    வணங்கினார்.
    மீண்டும் அமர்ந்தார்.

    விசாரணை தொடங்கியது.

    நீதிபதி கேட்டார் 
    நாவலரைப்  பார்த்து,
    "குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டு எல்லோரும் 
    ஏன் எழுந்தீர்கள் ?"

    "அவர் 
    வணங்கப் படவேண்டிய மகான்" 
    என்றார் நாவலர்.

    "வணங்கப் படவேண்டியவர் மீது வழக்கு ஏன் ?
    உங்கள் வழக்கே 
    தார்மீகமாகத் தப்பு.

    வழக்கைத் 
    தள்ளுபடி செய்கிறேன்,"

    நீதிபதி
    தீர்ப்பு எழுதினார்.

    தனித்து வந்த 
    வள்ளல் பெருமான் 
    தனித்தே திரும்பினார்.

    இதில்
    மனத்தில் பதிய வைக்க செய்தி ஒன்று உள்ளது.

    கோர்ட்டுக்கு வந்தது யார் ?

    வள்ளல் பெருமானா ??

    அவர் தர்மச் சாலையில் அல்லவா 
    தவத்தில் இருந்தார்..!

    அப்படியானால்….

    வள்ளல் பெருமான் தான் பற்பல இடங்களில் தோன்றுவாரே !

    அப்படி நடந்திருக்கும்.

    இல்லாது போனால் ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 
    பெருமானுக்குப் பதிலாக பெருமானாய் 
    வழக்காட வந்திருப்பார்.

    இது ஓர் 
    இறை குறிப்பு.

    வள்ளலார் கருணை ஆச்சரியமானது. அற்புதமானது.

    ஒருநாள் இரவு 
    ஒற்றியூர் சத்திரத்தில் வள்ளல்பெருமான் 
    தங்க நேர்ந்தது.

    அப்போதெல்லாம் வள்ளல்பெருமான் 
    காதில் 
    கடுக்கன்
    அணிந்திருப்பார்.

    காதுக் கடுக்கன்
    கள்வன் ஒருவனைக்
    களவாடத் தூண்டியது.

    ஒருக்களித்துப் 
    படுத்துக் கொண்டிருந்த வள்ளல் பெருமானின் காதருகே
    பூனைபோல வந்தவன் திறமையோடு 
    காதணியைத் 
    திருகித் திருடினான்.

    இன்னொரு காதணியும் அவனது திருட்டு 
    நோக்காக இருந்தது.

    வள்ளல் பெருமான் அவனுக்கு வாய்ப்பாக திரும்பிப் படுத்தார்.

    மறு காதணியையும் 
    கழற்றிய திருடன் வெற்றிவாகை சூடிய மகிழ்வில் புறப்பட்டான்.

    அவன் கரம் பற்றி, "இத்தொழில் 
    விட்டு விடு "
    என கனிவாகச் சொல்லி அனுப்பி வைத்தார். 

    பின்னொரு முறை….
    கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் இருந்தபோதும்
    இம்மாதிரிச் சம்பவம்
    ஒன்று நிகழ்ந்தது.

    ஹெட் கான்ஸ்டபிள் ஒருவரின்
    அழைப்பின் பேரில் சென்றிருந்து 
    இருட்டாகி ஆகிவிட்டதால் சத்திரத் திண்ணையில் படுத்திருந்தார்.

    பாதுகாவலுக்குப் 
    போலீசும் பக்கத்தில் 
    படுத்து இருந்தார்.

    வந்த திருடனின் 
    கண்களில் 
    சுவாமிக்குப்
    போலீஸ் போர்த்திய பொன்னாடையை 
    அவர்
    போர்த்தித் தூங்குவது தெரிந்தது. 

    நைசாக அருகில் வந்து ஆடையை உருவினான்.

    அவனுக்கு ஏதுவாக பெருமாள் 
    உடல் தளர்த்தி 
    புரண்டு படுத்து அனுமதித்தார்.

    ஆனால்
    பக்கத்தில் இருந்த போலீஸ்காரரோ 
    அக் கள்வனைக்
    கையும் களவுமாக 
    பிடித்து விட்டார்.

    "பாவம்… விட்டு விடுங்கள்… ஏழை… என்ன செய்வான் ?"
    என காவலரின்
    கையைத் தட்டி விட்டார்.

    ஆடையை உருவ வந்தவன் உருகிப் போனான். 
    அக் கள்வன் கை குவித்தான்.

    மாட்டிக்கொண்ட
    கள்வரைக் கூட 
    கனிவுடன் நடத்தி 
    உதவி புரிவதும் 
    புத்தி சொல்வதும்
    ஒருவகைக் கருணை.

    அறக்கருணை 
    என்பார்கள்.

    இன்னொன்றும் உண்டு.
    அது மறக்கருணை,

    தண்டித்துப் 
    புத்தி சொல்வது…
    திருந்த வைப்பது மறக்கருணை.

    மஞ்சக்குப்பம் 
    ராமச்சந்திர முதலியார் குடும்பத்தோடு 
    வள்ளல் பெருமானைத் தரிசிக்க வந்தார்.

    இரவு நெருங்கி விட்டதால் அவரைத் 
    தனியாக அனுப்ப 
    வள்ளல் பெருமான் விரும்பவில்லை.

    தானும் அவர்களின் 
    மாட்டு வண்டியில் ஏறி அவர்களை ஊர் சேர்க்கப்
    பயணப்பட்டார்.

    வழியில் 
    குள்ளஞ்சாவடி.
    அது
    திருடர்கள் நிறைந்த 
    காட்டுப் பகுதி.

    கள்வர்கள் 
    வண்டியைச் சூழ்ந்து முதலியார் அணிந்திருந்த 
    வைர மோதிரத்தைக்
    கழற்றச் சொல்லி 
    அதட்டினர்.

    அதுவரை 
    அமைதியாயிருந்த வள்ளல்பெருமான் "அவசரமோ…"
    என்று கேட்டார்.

    அதே வினாடியில் 
    அந்த அற்புதம் 
    நிகழ்ந்தது.

    சூழ்ந்திருந்த கள்வர்கள் சிலைபோல் ஆயினர்.

    தடியை ஓங்கியவனின் 
    கை தூக்கியபடியே செயலிழந்தது.

    "ஐயோ…. சாமி 
    தவறிழைத்து விட்டடோம்" கதறினர் கள்வர்.

    அமைதியாய்
    இருந்தார் 
    அருளாளர். 

    "இனிச் சத்தியமாகத்
     திருட மாட்டோம்…"

    அமைதியின் சொரூபம் அசையவில்லை.

    "உயிர் தாருங்கள்…
    இனி உழைத்து மட்டுமே உணவு உண்போம் "
    உறுதி சொல்லினர். 

    வள்ளல் பெருமான் 
    திருவாய் மலந்தார்.
    'பிச்' என்றார்.

    சிலை போல் இருந்த 
    திருடர்களால் 
    அசைய முடிந்தது.
    அடுத்த நொடியே 
    அருளாளர் காலில் விழுந்தனர். 

    இதுதான் 
    மறக்கருணை.

    தண்டித்துத் திருத்துவது. மறக்கருணை.

    இடை விடாத 
    இறை சிந்தனை. இடையிடையே 
    உலகம் உய்ய 
    உபதேசங்கள்.
    உலகோரை 
    உணரவைக்க 
    சித்தாடல்கள்.

    ஆண்டவரை 
    உள்ளொளியாய் 
    உணர்ந்து அனைவருக்கும் அவ்வனுபவத்தை வழங்க தயாராக இருந்த பேருள்ளம்.

    இப்படியெல்லாம் 
    இருந்தும் 
    வள்ளல் பெருமானின் 
    முகம் எப்போதும் 
    வாடியே இருந்தது.

    மக்கள் நெருங்கி 
    வராத நிலை. 
    நெருங்கி வந்த 
    அன்பர்களும் 
    உபதேசங்களை 
    உள்ளத்தில் 
    ஏற்றாத நிலை.

    'கடைவிரித்தேன் கொள்வாரில்லையே '
    என்னும் மனநிலை.

    வந்த தன் நோக்கம் நிறைவேறாத ஏக்க நிலை. சித்தர்கள் பலருக்கும் 
    நேர்ந்த நிலை.

    உலகுக்கே உபதேசம் 
    அருளிய 
    வள்ளல் பெருமானின் 
    உள் மனமோ 
    வேறு ஒரு உபதேசம் சொல்லியபடியே இருந்தது.

    இது 
    சீரிய சித்தர்களுக்கே 
    இயலும் நிலை.

    வழக்கம்போல 
    சித்தர்கள் 
    இறையடி சேரும் 
    இயல்பான நிலை அல்ல.

    அதற்கு மேலே.

    எந்த சித்தரும் 
    அடையாத 
    சித்தி நிலை.

    முத்தேக சித்தி நிலை.

    (சரித்திரம் விரியும்)

  • Vallar Part 4

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 4

    ஆரவாரம் நிறைந்த சென்னையும் 
    அன்பு நிறைந்த 
    உற்றாரும் உறவினரும்
    ஒருவித அமைதி தேடிய வள்ளல் பெருமானுக்கு சுமையாகப் பட்டனர்.

    வயதோ முப்பத்தைந்தை எட்டிப்பார்த்து இருந்தது.

    சிதம்பரம் 
    நடராஜர் வேறு 
    அடிக்கடி கனவிலும் நினைவிலும் 
    ஏக்கத்தோடு 
    அழைத்தார்.

    கடைசியாக 
    குழந்தையாக 
    ஐந்து மாதத்தில் 
    பார்த்தது.

    தேச சஞ்சாரம் திருக்கோயில்கள் 
    ஏழை எளிய 
    பாவப்பட்ட மக்கள் விருப்பமாக இருந்தது.

    இறை தேடலை 
    ஒட்டி 
    ஞானத்தேடல் 
    பாக்கியிருந்தது.

    சென்னைக்கு விடைகொடுத்தார்.

    வள்ளலாரின் 
    ஞானப் படை 
    தரைவழிப் பயணமாய் ஒவ்வொரு கோயிலாக வழிபட்டு 
    சிதம்பரம் வந்தது.

    வழிபட்டது.

    அங்கு கோயிலில் 
    வள்ளல் பெருமான் மீது கருங்குழி மணியக்காரர் வேங்கட ரெட்டியார் விழிபட்டது.

    "எனது இல்லத்தில் தங்குங்கள்…

    அங்கிருந்தபடியே 
    கோயில் கோவிலாய் போகலாம்.
    ஆன்மீகம் அருளலாம். தமிழமுது படைக்கலாம்."

    மறுக்க விடாமல் 
    வற்புறுத்தி 
    கருங்குழிக்கு அழைத்துச்சென்றார்.

    ஒன்பது ஆண்டுகள் கருங்குழியே 
    வள்ளல் பெருமானின் வசிப்பிடம் ஆனது.

    இக்காலத்தைச் 
    சிதம்பர வழிகாட்டு காலம் என வரலாறு
    குறிப்பிட்டு மகிழ்கிறது.

    நான்காம் திருமுறையும்
    ஆறாம் திருமுறையின் முற்பகுதியும்
    இக்காலத்தில் 
    வள்ளல் பெருமானால் அருளப் பெற்றன. 

    கருங்குழியில் 
    இரவுநேரத்தில் எழுதுவது வள்ளல் பெருமானின் வழக்கம்.

    ஒரு நாள்
    விடிய விடிய 
    எழுதினார்.

    வெளிச்சம் குறையவே அருகில் இருந்த 
    எண்ணெய் செம்பைக் கவிழ்த்து ஊற்றி எழுத்துப்பணி 
    தொடர்ந்தார்.

    மறுநாள் காலை 
    ஓர் உண்மை 
    அதிசயமாய் 
    உலகிற்குத்
    தெரியவந்தது.

    எண்ணெய் செம்பில் 
    அன்று எண்ணெய் இருக்கவில்லை.

    எண்ணெய் 
    ஊற்றி வைக்கும் 
    பணி செய்யும் 
    ரெட்டியார் வீட்டம்மாள் 
    ஏதோ 
    ஊருக்குச் செல்லும் அவசரத்தில் 
    தவறிழைத்து விட்டார்.

    புதிய செம்பில் 
    நீர் ஊற்றி 
    அதை பதமாக்க 
    ஓரத்தில் வைக்க நினைத்தவர் 
    ஏதோ நினைப்பில் வள்ளல்பெருமான் 
    பக்கத்தில் வைத்துவிட்டார்.

    மறுநாள் காலை…
    வள்ளல் பெருமான் தண்ணீரில் 
    விளக்கெரித்த தன்னிகரில்லா 
    தவ ஆற்றல் 
    ஊருக்குத் தெரியவர அன்பர்கள் 
    கொண்டாடி வணங்கினர்.

    தண்ணீரில் விளக்கெரித்து
    தன்னிகரில்லா 
    அகவல் அருளியதும் 
    அன்று இரவு தான்.

    அன்று
    ஓர் இரவில் 
    பெருமாள்
    திருக்கரத்தால் 
    அருளியது தான் 
    இன்றளவும்
    ஒப்புயர்வற்ற 
    ஞான பொக்கிஷமாக
    விளங்கும் அகவல்.

    வள்ளலார் அருளிய
    அருட்பெருஞ்ஜோதி அகவல்
    தமிழ் இலக்கிய உலகில் எழுதப்பட்ட 
    1596 அகவல் பா
    வரிகள் கொண்ட
    முதல் மற்றும் முதன்மை இலக்கியம்.

    இன்றளவும் 
    அதை விஞ்சிய 
    அகவலும் இல்லை.
    ஞானமும் இல்லை.

    உபதேசம் 
    நோய்க்கு மருந்து அற்புதங்கள் 
    சித்தாடல்கள் 
    என்பன 
    அக்கம்பக்கம் பரவி அன்பர்கள் பெருகினர் 
    இக் காலகட்டத்தில்.

    அவரது 
    ஆன்மீகக் கட்டமோ 
    தேடலை அடுத்து 
    ஞானத்தை 
    நெருங்கி நின்றது.

    ஆம்….
    வள்ளல்பெருமான் 
    சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதிய நெறியை உணர்ந்து திளைக்கும் உயர்ந்த நெறியை பின்னாளில்
    உலகுக்கு 
    அர்ப்பணித்தார்.

    'கடவுள் ஒருவரே.
    உண்மை அன்பால் 
    அவரை ஒளி வடிவாய் உணரலாம்.
    வழிபடலாம்.

    அவரே 
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் '
    என்று இறைவனை வணங்கவும்
    வழிபடவும் 
    நெருங்கவும் 
    உணரவும் 
    வழி சொன்னார்.

    வாழ்வியல் நெறிகளை வரிசைப் படுத்தினார்.

    சன்மார்க்க 
    கொள்கைகளை
    அறிவித்தார்.

    ஒரு நன்னாளில்
    சுத்த சன்மார்க்கத்தை கருங்குழியில் நிறுவினார்.

    அதுவரைத் 
    தான் உள்பட 
    உலகத்தார் வணங்கிய தெய்வங்கள் யாவும் 
    மறை தெய்வங்கள் 
    என்றும் 
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் 
    நிறை தெய்வமென 
    தான் உணர்ந்ததை 
    உலகிற்குச் சொன்னார்.

    புலால் மறுத்தலும் பசித்தவருக்கு உணவிடுதலும் ஜீவகாருண்யம் 
    என்றும் 
    ஜீவகாருண்யமே 
    மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் 
    ஜீவகாருண்யம் இல்லாத இறை வழிபாடு பயனற்றது இறையிடம் சேர்க்காது என்றும் 
    உண்மை சொன்னார்.

    அன்பர்கள் சேர்ந்ததால் ஆர்ப்பரிப்பது
    வள்ளலாரின்
    வழக்கமில்லை.

    குறைவான பேச்சும் நிறைவான தவமும்
    அவரது 
    வாழ்வியல் கொள்கை.

    பசியாற்றும் 
    அன்னதான பணிக்கு 
    சத்திய தருமச்சாலையை வடலூரில்
    1867-இல் துவக்கினார்.

    அவர் 
    இட்ட கருணைத் தீ 
    இன்றும் அணையா 
    அடுப்பாய் 
    154 ஆண்டுகளாய் 
    அன்பர்கள் பசியை 
    ஆற்றி வருவது 
    உலகமே வியந்து போற்றும் அறப்பணி.

    உலகிற்கே வழிகாட்டும் ஜீவகாருணியப் பணி.

    ஊரும் உலகமும் 
    வள்ளல் பெருமானை ஊன்றிப் பார்த்து 
    வியந்த வேளை…. 

    தொழுவூர் 
    வேலாயுதனாரும் 
    இறுக்கம் 
    ரத்தினசாமி முதலியார் போன்றோரும் 
    வள்ளல் பெருமான் 
    அதுவரை 
    அருளியவற்றைத் தொகுத்து ஐந்து திருமுறைகளாக வெளியிட்டனர்.

    அவரது பாடல்களை திருஅருட்பா என்றும் 
    அவரை 
    திருஅருட்பிரகாச வள்ளலார் என்றும் 
    உலகம் அழைக்க ஆரம்பித்தது.

    இதற்கு வித்திட்டவர் தொழுவூராரே.

    திருவருட்பா என்றும் திருமுறை என்றும் 
    பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் வழக்கும் 
    வந்தது.

    அது காலப்போக்கில் காணாமல் போனது.

    தர்மச் சாலை 
    தொடங்கப் பெற்றதும்
    கருங்குழி விடுத்து 
    வடலூர் வந்தார் 
    வள்ளல் பெருமான்.

    தர்மச் சாலையே இருப்பிடமானது.

    வடலூர்
    தமிழக வரைபடத்தில் முக்கியம் ஆனது.

    இறையனுபவம் 
    தேடுபவர்களின்
    புகழிடம்
    புகலிடமானது.

    தனிமை வேண்டி 
    வள்ளல் பெருமான் 
    அருகிருக்கும் 
    மேட்டுக்குப்பம் சென்று அங்கேயே உறையத் தொடங்கினார்.

    சித்தி வளாகம்.

    மேட்டுக்குப்பத்தில் பெருமானார் தங்கிய திருமாளிகை.

    அதன் பெயரை 
    சித்தி வளாகம் 
    என வைத்த 
    பெருமான் மனதில் 
    ஒரு கணக்கு இருந்தது. 
    அது இறை சித்தம்.
     அவருக்கு மட்டும் உணர்த்தப்பட்ட 
    நிறைநிலை.

    சித்தி வளாகத்தில் 
    இருந்த படி 
    சத்திய ஞானசபையை உருவாக்கினார் 
    வள்ளல் பெருமான்.

    ஞான சபையில் 
    ஏழு திரைகள் அமைத்து
    ஏழு தத்துவங்களை 
    விளக்கி 
    எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை அனுபவமாய் 
    உலகுக்குக் காட்டினார்.

    அதை உணர்வோர் கூட்டம் ஞான சபையை 
    கோயிலாகக் கொண்டு இன்றும் கூடி வழங்குவது கண்கூடு.

    ஞான சபையைத் 
    தொடர்ந்து 
    சன்மார்க்கத்தின் 
    கொடியைப் படைத்தார்.

    கொடியைப் பறக்க விட்டு பெருமான் உபதேசித்தது 
    மகா உபதேசம் 
    பேருபதேசம் 
    என்ற பெயரோடு 
    ஞான வழிகாட்டி வருகிறது.

    அதுவே 
    வள்ளல் பெருமானின் தீர்க்கமான கொள்கை வழிபாடு.


    அது 
    1874 ஆம் ஆண்டு.

    கார்த்திகைத் தீபத்தன்று 
    ஒரு விளக்கைச்
    சித்திவளாகத் திருமாளிகையில் 
    புறத்தில் வைத்தார்.

    'இதை ஜோதியாய் ஆராதியுங்கள்.
    தடைபடாது ஆராதியுங்கள்… நினைந்து நினைந்து 
    என்று தொடங்கும் 
    ஞான சரியை
    28 பாடல்களாக அருளப்பட்டுள்ளது.

    அதனைப் பாடியபடி 
    தெய்வ பாவனையை ஜோதியில் செய்யுங்கள்.

    நான் இப்போது 
    இந்த உடம்பில் 
    இருக்கிறேன்…

    இனி 
    அனைத்து உடம்பிலும்
    புகுவேன்.'

    உபதேசித்தார் 
    மெல்லிய குரலில்.

    'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி '
    என்று உள்ளம் உருகி குரலெழுப்பியது 
    அன்பர்கள் கூட்டம்.

    'சாகாதவனே சன்மார்க்கி' என்பது 
    வள்ளல் பெருமானின் உபதேச மொழி.

    பெருமானார்
    அறைக்குள் நுழைந்தார்.
    கதவு சாத்தப்பட்டது.
    பெருமானின் உருவம் உலகின் கண்களில் 
    இருந்து மறைந்தது.

    அன்பர்கள் 
    இக்கணம் வரை 
    அவர் வரவுக்கென 
    வழிமேல் விழிவைத்து 
    காத்த வண்ணம் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அறைக்குள்ளே 
    நடந்தது என்ன ? 
    என்ன நடந்திருக்கும் ?

    வள்ளல் பெருமான் இறையோடு இறையாக இரண்டறக் கலந்துவிட்டார்.

    உலகில் 
    பல சித்தர்கள் 
    இப்படித்தான் 
    கலந்தார்கள். 

    ஆனால் 
    நிறைஞானியான 
    வள்ளல் பெருமான் 
    ஒளி தேகம் பெற்றவர்.

    அதனால் அருட்பெருஞ்ஜோதியில் ஒளியாய் கலந்துவிட்டார். கரைந்து விட்டார்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை போல் 
    வள்ளல் பெருமானும் எல்லாவற்றிலும்
    வியாபகம் ஆனார்.

    பிறப்பில் 
    வளர்ப்பில் 
    எழுத்தில் 
    பேச்சில் 
    சித்தாடல்களில் 
    அருளில்
    மட்டுமில்லாது 
    நிறைவிலும் 
    உலகை 
    வியக்க வைத்தவர் 
    வள்ளல் பெருமான்.

    (வள்ளலார் சரித்திரம் விரியும்)
     

  • vallar part 3

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் -3

    வள்ளல் பிரானின் அண்ணன் 
    சபாபதி பிள்ளைக்கு 
    ஒரு சனிக்கிழமை அன்று 
    கடும் சுரம்.

    சனி தோறும் அவருக்கு 
    சோமு செட்டியார் என்னும் 
    செல்வந்தர் வீட்டில் சொற்பொழிவு இருக்கும்.

    மனைவியின் 
    பரிந்துரையின் பேரில் தம்பியை 
    அனுப்பி வைத்தார் 
    சுரத்தில் மூழ்கிய 
    சபாபதி பிள்ளை.

    ஆன்றோரும் சான்றோரும் கூடியிருந்த 
    சபையில் சின்னஞ் சிறுவரான 
    வள்ளல் பெருமான் 
    பேசிய பேச்சு 
    அதுவரை…… ஏன் 
    இன்றுவரை 
    தமிழ் உலகும் 
    ஆன்மீக உலகும் 
    கேட்டிராத பேச்சு.

    ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரின் 
    திவ்விய சரித்திரத்தை ஞானச்செல்வன் 
    நீண்ட நேரம் 
    பிரசங்கம் செய்தார்.

    வழக்கத்திற்கு மாறாக நள்ளிரவு வரை 
    நீண்டிருந்தது சத்சங்கம்.

    ஆனால் 
    பாடல் வரிகளில் 
    இரண்டு வரிக்குத் தான்
    விளக்கம் சொல்லியிருந்தார்.

    சொற்பொழிவின் போது
    'உலகெலாம்' என்ற சொல்லை 
    அவர் விளக்கிய விதம் அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    அன்றுதான் 
    வள்ளல் பெருமானின் பேச்சாற்றல் 
    ஊருக்குத் தெரிந்தது.

    மறுநாள் 
    சொற்பொழிவுக்கு அழைப்பதற்காக 
    சோமு செட்டியார் தரப்பு பிரமுகர்கள் 
    வந்திருந்தார்கள்.

    சபாபதி பிள்ளை 
    அவர்களை வரவேற்று உபசரித்து 
    காய்ச்சல் சரியானவுடன் 
    வந்து விடுவதாகச் சொன்னார்.

    ஆனால் வந்தவர்களோ,
    "ஐயா…  நீங்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்…
    உங்கள் தம்பி 
    உங்களை விட பிரமாதமாக சொற்பொழிவாற்றினார்.
    செட்டியார் 
    உங்கள் தம்பியைத் தான் பேசி சம்மதம் 
    பெற்று வரச் சொன்னார்…"

    என்று சொல்ல 
    முகம் சுருங்கியதே தவிர 
    மனம் விரிந்து மகிழ்ந்தது சபாபதி பிள்ளைக்கு.

    பின்னொரு நாள்…

    வள்ளல்பெருமான் பேச்சை  மறைந்து நின்று கேட்டு 
    பிரமித்துப் போனார் அண்ணன்.

    அதுமுதல் 
    அண்ணன் பெருமைப்படும் தம்பி ஆனார் 
    வள்ளல் பெருமான்.

    சிதம்பரம்
    அப்பைய தீட்சிதர்
    சொல்லிய சொற்கள் உண்மையாவதைக் கண்ட சபாபதி பிள்ளை 
    தம்பியைத் 
    தெய்வக்குழந்தை 
    என உணர்ந்து
    தொழவும் 
    தயங்கவில்லை.

    ஒன்பது வயதில் கண்ணாடியில் 
    காட்சி தந்து 
    ஆட்கொண்ட இறைவன் 
    12 வயதில் 
    அருளியல் வாழ்க்கைக்கு ஆணையிட்டார்.

    வள்ளல் பிரானின்
    அருளியல் வாழ்க்கை தொடங்கியது.

    தினமும் கால்நடையாக திருவொற்றியூர் சென்று 
    தியாகராஜப் பெருமானையும் 
    வடிவுடை அம்மனையும் வழிபடுவார்.

    அக்கோயில்
    முருகன் சிலைக்கு 
    முன் நின்று 
    திருத்தணி முருகனாக பாவித்துக் கவி பாடுவார்.

    இடையிடையே திருத்தணி விஜயமும் இனிதே நடந்தது.

    இவையே 
    வள்ளல் பெருமானின் 
    35 வயது வரை நிகழ்ந்த ஆன்மிக நிகழ்வுகள்.

    அவர் திருவாய் மலர்ந்தவை தமிழுக்கு கிடைத்த 
    அற்புத பாடல்கள் ஆகின.

    பின்னாளில் 
    திருமுறைகள் ஆகின.

    சென்னையில் 
    இருந்த காலம் 
    பெருமானின் 
    வாழ்க்கைக் தடத்தில் 
    அருளும் ஆன்மீகமும் 
    ஆற்றலும் தமிழும் 
    செழித்த காலம்.

    ஓதாது உணர்ந்த பெருமானிடம் 
    ஆன்றோரும் சான்றோரும் கற்றோரும் 
    கவி படைப்போரும் 
    மேலும் கற்க 
    தேடி வந்தனர்.

    எந்நேரமும் 
    சூழ்ந்து நின்றனர்.

    காலையிலே சிறுவர்களுக்கான வகுப்பு.

    மதியம் 
    தமிழ் 
    ஆர்வலர்களுக்கான புலவர்களுக்கான 
    தமிழ் வகுப்பு.
    இலக்கண வகுப்பு.

    மாலை சத்சங்கம்.
    கூடவே 
    திருவொற்றியூர் பயணம்.

    இதுவே பெருமானின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

    எண்ணற்ற 
    தமிழ் வித்துவான்கள் புகழ்பெற்ற தமிழ்க் கடல்கள் 
    பெருமானிடம் வந்து சேர்ந்து தமிழ் கற்றது 
    அவரால் புலமை பெற்றது வரலாற்றுப் பதிவு. 

    வள்ளல் பெருமானின் 
    முதல் மாணாக்கர் 
    என்ற பெருமை பெற்றவர்  
    தொழுவூர் வேலாயுதனார்.

    பெருமானோடு சேர்ந்து
    தமிழ் மணம் பரப்பிய பேறுபெற்றவர் அவர்.

    தொழுவூரார்
    பெருமானைத் 
    தொழுத நிகழ்வு சுவாரசியமானது.

    பெருமானாரைச் 
    சந்திக்க நினைத்த தொழுவூரார் 
    அவரைச் சோதித்தறிய முற்பட்டார்.

    தானே கடின நடையில் 
    நூறு செயல்களை இயற்றி அவற்றைக் கையோடு 
    எடுத்து வந்து 
    பழைய ஏடுகளில் 
    காணப்பட்ட 
    சங்கப் பாடல்கள் என பெருமானார் கைகளில் வைத்தார்.

    படித்துப் பார்த்த 
    மாத்திரத்தில் 
    "இவை 
    சங்கப்பாடல்கள் இல்லை…
    யாரோ 
    பொருளிலக்கணம் தேரா கடைக்குட்டி பாடியவை"
    என்று புறம் தள்ளினார் தமிழ்ப் புலமையில் இணையற்ற 
    இறைப் புதல்வர் தமிழ்த்தாயின் 
    தவப்புதல்வர் வள்ளல் பெருமான்.

    தொழுவூரார் 
    நாணிக் கோணி 
    தாள் பணிந்தார்.
    பெருமானிடம் 
    மன்னிப்புக் கோரி சரணடைந்தார்.

    அது முதலே 
    வள்ளல் பெருமானின் சீடரானார்.
    அவருடனேயே இருந்தபடி தமிழ்ச் சேர்த்தார். 
    பெரும்புலவர் ஆனார்.

    பின்னாளில் 
    மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் 
    பேராசிரியராக உயர்ந்தார்.

    'உபய கலாநிதி பெரும்புலவர்'
    என பட்டமும் பெற்றார்.

    இறுக்கம் இரத்தினம் முதலியார் 
    பொன்னேரி சுந்தரம் நரசிங்கபுரம் வீராசாமி 
    பாயாறு ஞானசுந்தரம் ஐயர் கிரியா யோகா 
    பண்டாரம் ஆறுமுகம் ஐயா 
    என பயின்றவர் 
    பட்டியல் நீளும்.

    இதுதவிர 
    தமிழ் பெரியார்கள் 
    பெரும் புலவர்கள் வள்ளல்பெருமான் தொடர்பில் இருந்தனர்.

    ஒரு முறை
    அப்போதைய சங்கராச்சாரியாருக்கு வடமொழியில் 
    ஒரு சந்தேகம்.

    அதைத் தன் மாணாக்கர் தொழுவூராரைக் கொண்டு தீர்த்து வைத்தார்.

    இப்படி ஆன்றோர் சான்றோர் பலர் 
    சந்தேகம் கேட்டு தெளிந்தனர். 
    சத்சங்கம் கேட்டு சிறந்தனர்.

    சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில்தான்
    நூல்கள் பல அருளினார். அரிய நூல்களைப் புதுப்பித்தார்.
    பதிப்பித்தார்.

    மாயூரம் 
    வேதநாயகம் பிள்ளை போன்றோருக்கு 
    சாற்றுக் கவி அளித்தார்.

    அருளியல் வாழ்க்கையை 
    12 வயதில் தொடங்கி 
    இறை அருளுக்கும்
    தமிழ் அருள்வதற்கும் தன்னை 
    அர்ப்பணித்துக் கொண்ட வள்ளல் பெருமானுக்கு 
    வந்தது ஒரு தொந்தரவு 
    27 வயதில்.

    பிள்ளைப் பருவத்திலேயே மூவாசைகளையும்
    முற்றும் துறந்து 
    துறவொழுக்கம்
    பூண்டவருக்கு 
    ஓர் அன்பு நெருக்கடி.

    தமையனும் தாயும் சகோதரிகளும் சகோதரர்களும் 
    தந்த குடும்பப் பிடி.

    சகோதரி உண்ணாமுலை அம்மையாரின் மகள் 
    தனகோடி அம்மாளைத் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தித்தனர்.

    எவ்வளவோ மறுத்தும் 
    வீட்டாரே வென்றனர்.

    பெருமான் 
    இறைவனை 
    வேண்டியபடி 
    தாலி கட்டினார்.

    முதலிரவன்றே 
    தன் நிலையை 
    விளக்கினார். 
    வீட்டார் ஏற்காத 
    வள்ளலின் சிந்தனையை கட்டிய மனைவி 
    கலங்கியபடி 
    முழுதும் ஏற்றார்.

    பெருமானாரின் துறவறப்பயணம் 
    மனம்போல் தொடர்ந்தது.

    –    வள்ளல்பிரானின் சரித்திரம் தொடரும்..
     

  • Vallar Birth Day

    வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார்.

    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

    தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

    இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.