Tag: Thirumanjanam

  • Thirupathy Alvar Thirumanjanam

    திருப்பதி கோவிலில் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படுகின்ற தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. அதன்படி யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம். 

    அதன்படி இன்று அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவை, கொலு ஆகிய பூஜைகள் முடிந்ததும், கோவிலின் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டது. மூலவர் ஏழுமலையானின் விக்ரகத்தில் மாசு படியாமல் இருப்பதற்காக பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது. அப்போது கோவில் கருவறை, துவார பாலகர், ஆனந்த நிலையம், வரதராஜசாமி சன்னதி, லட்சுமி நரசிம்மசுவாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, பாஷிங்கார்ல சன்னதி, தங்க கொடி மரம், பலி பீடம், வெள்ளி கதவுகள், சம்பங்கி மண்டபம், மகா துவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் என அனைத்து இடங்களும் பச்சை கற்புரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான சுகந்த மூலிகைப் பொருட்களை கொண்டு தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

    இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்ஷித்தலு தேவஸ்தான  ஊழியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 11 மணியளவில் தூய்மைப்பணி முடிந்ததும், ஏழுமலையான் மீது போர்த்தப்பட்ட பட்டு துணியை அகற்றி விட்டு, மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. 

    நண்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி கோவிலில் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டது.

  • Noi Theerkum Thirumanjanam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சயனி ஏகாதசியை முன்னிட்டு வருகிற 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்துக் கால கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

    ஏகாதசி தோன்றிய புராண வரலாறு :
    தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்ல துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட ஸ்ரீமன்நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

    நெல்லிப்பொடியின் சிறப்பு :
    நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நெல்லிப்பொடி தீர்த்த திருமஞ்சனத்திலும், மஹா தன்வந்திரி ஹோமத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203